Last Updated:
தென்கொரியா, வடகொரியாவிற்கு எதிரான பரப்புரையை கைவிடுவதாக அறிவித்துள்ளது.
எல்லை பகுதியில் ஒலிபரப்பப்படும் வடகொரியாவிற்கு எதிரான பரப்புரையை கைவிடுவதாக தென்கொரியா அறிவித்துள்ளது.
வட கொரியா – தென் கொரியா இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், வடகொரியா அவ்வப்போது ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனை நடத்தி வருவதால் கொரியா தீபகற்பகத்தில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. அண்மையில் தென் கொரியா நாட்டிற்குள், பலூன்கள் மூலம் குப்பைகளை வட கொரியா கொட்டியது.
இதற்கு பழி வாங்கும் விதமாக, எல்லையில் ராட்சத ஒலிபெருக்கிகளை வைத்து வடகொரியாவிற்கு எதிராக பிரச்சாரங்களை தென்கொரியா ஒலிபரப்பியது. பகல் நேரத்தில் 10 கிலோமீட்டர் மற்றும் இரவில் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வடகொரியா நகரங்கள் வரை இந்த ஒலிப்பெருக்கி பரப்புரை எட்டியது. இதன் காரணமாக இரு நாடுகளிடையே மேலும் பதற்றம் அதிகரித்தது.
இந்நிலையில், வடகொரியா உடனான உறவை மேம்படுத்தவும், அமைதியை ஊக்குவிக்கவும் எல்லைப் பகுதியில் ஒலிபரப்பப்படும் வடகொரிய எதிர்ப்பு பரப்புரையை கைவிடுவதாக தென் கொரியா அறிவித்துள்ளது. எல்லைப் பகுதியில் உள்ள ஒலிப்பெருக்கிகளை அகற்றுவதால் ராணுவத்தின் தயார் நிலையில் எந்த பின்னடைவும் இருக்காது என்று தென்கொரியா தெரிவித்துள்ளது.
மேலும் உலகில் பல்வேறு நாடுகளிடையே மோதல் போக்கு அதிகரித்து வரும் சூழலில் பரம எதிரியான வடகொரியாவுடன் தென்கொரியா மென்மையான போக்கை கையாளத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
August 05, 2025 2:59 PM IST
பகலில் 10 கி.மீ., இரவில் 25 கி.மீ… வட கொரியா – தென் கொரியா எல்லையில் முடிவுக்கு வரும் முக்கிய பிரச்சனை!


