International
oi-Vishnupriya R
காத்மாண்டு: நேபாளத்தில் கோஷி ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் ஒரு வினாடியில் அனைத்தையும் துவம்சம் செய்துவிட்டது. இதுகுறித்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. ஒருவர் மலை மேல் நின்றுக் கொண்டு அம்மா என கதறுகிறார்.
நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் நேற்று காலை கோஷி ஆற்றில் காலை 9 மணிக்கு திடீர் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. திபெத் பகுதியில் இருந்து வந்த வெள்ளத்தால் வீடுகள், சாலைகள், பாலங்கள் மற்றும் நீர் மின் திட்டங்கள் கடும் சேதமடைந்தன.

ராசுவா பகுதியில் பனி சூழ்ந்த ஏரி உருகி மொத்தமாக ஏரி வெளியேறிதால் வெள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் 105 பேர் இந்த வெள்ளத்தில் சிக்கி மாயமானதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அது போல் அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 384 சுற்றுலா பயணிகள் மாயமாகிவிட்டனராம். இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த 109 பேர் வெவ்வேறு சுற்றுலா நிறுவனங்கள் மூலம் நேபாளம், திபெத்திற்கு வந்தனர்.

இவர்களில் 37 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்த சுற்றுலா நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆன்மீக பயணத்தில் சுமார் 57 பேர் நேபாளம் சென்றனர். இவர்களில் 20 பேரின் பத்திரமாக உள்ள நிலையில் மீதமுள்ள 37 பேரின் நிலை தெரியவில்லை.
அவர்கள் கைலாயம், மானசரோவர் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா சென்றதாக சொல்லப்படுகிறது. இவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற தகவல் தெரியாமல் உறவினர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள். சிலர் பாதுகாப்பாக இருப்பதாக ஏஜென்சி மூலம் சொல்லப்பட்டாலும் அவர்கள் தங்களை தொடர்பு கொள்ளவில்லை என தெரிவிக்கிறார்கள். இந்த வெள்ளத்தால் நேபாளில் கட்டப்பட்டு வந்த நீர்த்தேக்கம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டது.

இந்த கோர சம்பவம் குறித்து தமிழக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், “நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் தமிழர்கள் உள்பட இந்தியர்கள் பலர் காணாமல் போனதாக வரும் செய்திகள் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
இந்த பேரிடரில் காணாமல் போன தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை விரைந்து மீட்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அரசு உயர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில் அவர்களோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது உறவினர்களோ தொடர்பு கொள்ள ஏதுவாக அவசர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகம் ஆகியவற்றின் வாயிலாக, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குறித்த தகவல்களைப் பெற்று, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Horrible video of Nepal flood #nepalinews #NepaliNewsToday #floodnews #nepalflood pic.twitter.com/aJc1mckPXh
— Preeti Sompura (@sompura_preeti) August 26, 2026
இந்த நிலையில் ஒரு கொடூர வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் யாரோ ஒரு இளைஞர் மலை மீது ஓடி வந்து வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார்.
அதில் வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது. கீழே இருந்த சுற்றுலா பயணிகள் வேகமாக மலை பகுதிக்கு ஓடி வருகிறார்கள். ஆனால் அவர்களில் சிலரை துரத்திய வெள்ளம் அப்படியே கொத்தாக வாரி சுருட்டிய காட்சிகள் இடம் பெற்றன. இந்த காட்சியை பார்த்துவிட்டு ஒரு இளைஞர் தலையில் கை வைத்துக் கொண்டு அம்மா என கத்தும் காட்சிகளும் இடம் பெற்று பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

