நேபாளம் தெற்காசியாவின் மையப் பகுதியில் அமைந்துள்ள நிலத்தால் சூழப்பட்ட ஒரு நாடு. சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு பெரும் வல்லரசுகளுக்கு அருகாமையில் இருப்பதால் புவியரசியலில் பேசப்படும் ஒரு நாடாகவும் இருக்கிறது.
நேபாளத்தின் புவியியல் ரீதியிலான அமைவிடம், அதன் வெளிநாட்டு உறவுகள் மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகள் பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளுக்கு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
வரலாற்று ரீதியாக நேபாளம், சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுடனும் நெருங்கிய உறவைப் பேணி வந்திருக்கிறது. சமீபத்திய தசாப்தங்களில், நேபாளத்தின் உள்கட்டமைப்பு மேம்பாடு, வர்த்தகம் போன்ற துறைகளில் முதலீடு செய்துள்ள சீனா அந்நாட்டின் முக்கிய பொருளாதார பங்காளியாக உருவெடுத்துள்ளது.
சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சி (பிஆர்ஐ) திட்டம் இரு நாடுகளுக்குமிடையில் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் ஆழமாக்கியுள்ளது. நேபாளம் மட்டுமல்லாமல், பெல்ட் எண்ட் ரோட் என்ற திட்டத்தின் மூலம் சீனா தனது பொருளாதார வல்லமையைப் பயன்படுத்தி உலகின் பல நாடுகளை தனது கைகளுக்குள் கொண்டு வந்திருக்கிறது.
தேசங்கள் எல்லைகள் என்று மட்டுமில்லாமல், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடற்பரப்புகளைக் கூட சீனா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது. மூலோபாய கடல் பிராந்தியங்களை கைப்பற்றும் நோக்கில் “முத்துக்களின் சரம்” என்ற கடலாதிக்க திட்டமொன்றையும் சீனா செயற்படுத்தி வருகிறது.
அது மட்டுமல்லாமல், தனது அண்டை நாடுகளான இந்தியா, பூடான், தாய்வான் உள்ளிட்ட நாடுகளோடு எல்லைத் தகராறுகளை உருவாக்கி, அத்துமீறல்களை நடாத்தி வருவதாக சீனாவின் மீது குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு படலத்திற்கு இரையாகிப் போகும் இன்னுமொரு நாடாகத்தான் நேபாளத்தைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
சுமார் 30 மில்லியன் மக்களைக் கொண்ட நிலத்தால் சூழப்பட்ட நேபாளம், சீனா மற்றும் இந்தியா ஆகிய இரண்டு மாபெரும் பொருளாதார ஜாம்பவான்களுக்கு இடையில் அமைந்துள்ளது.
புவியியல் ரீதியிலான நேபாளத்தின் மூலோபாய அமைவிடம் காரணமாக, சீனா நேபாளத்தின் மீது தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கை சமநிலைப்படுத்த முடியும் என்று சீனா நம்புகிறது.
நேபாளத்துடன் வலுவான உறவுகளை வளர்ப்பதன் மூலம், இந்தியாவின் ஆதிக்கத்தை குறைத்து, தெற்காசியாவில் தனது செல்வாக்கை மேலும் விரிவுபடுத்துவதை சீனா நோக்கமாகக் கொண்டுள்ளது.
வளரும் நாடுகளிலும், குறிப்பாக கேந்திர முக்கியத்துவமிக்க நாடுகளிலும் சீனா, பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சி (பிஆர்ஐ) திட்டத்தின் மூலம் முதலீடுகளை செய்து வருகிறது. சீனாவின் இந்த முதலீடுகளுக்கும், கடன்களுக்கும் பின்னால் உள்ள மறைமுக நோக்கங்கள் குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டு வருகின்றன.
நேபாளத்தின் உள்கட்டமைப்புத் துறையில் சீனா அதிக முதலீடுகளை செய்துள்ளது. வீதிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் விமான நிலையங்கள், போன்ற கட்டுமானங்கள் இவற்றில் அடங்குகின்றன.
காத்மாண்டு மற்றும் திபெத் இடையே இரயில் இணைப்புகளை உள்ளடக்கிய டிரான்ஸ்-ஹிமாலயன் செயல் திட்டத்தை சீனா முன்மொழிந்துள்ளது.
நேபாளம் ஏராளமான நீர் வளங்களைக் கொண்ட நாடாகும். புதிய நீர்மின் நிலையங்களை நிர்மாணிப்பதற்கும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சக்திகளை உற்பத்தி செய்யும் திட்டங்களுக்கும் சீனா முதலீடு செய்துள்ளது.
நேபாளத்தில் மேற்கொள்ளப்படும் சீனாவின் இந்த முதலீடுகள் வெறும் பொருளாதார வாய்ப்புகளை கட்டமைக்கும் திட்டம் மட்டுமல்ல, சீனாவின் புவிசார் அரசியல் செல்வாக்கை அதிகரிக்கும் திட்டமாகவே இது பார்க்கப்படுகிறது. சீனாவின் முதலீடுகளை கடன் பொறி ராஜதந்திரத்தில் நேபாளத்தை சிக்க வைக்கும் ஒரு மூலோபாய தந்திரம் என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த முதலீடுகள் நேபாளத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானதாக அந்நாட்டுத் தரப்பால் கருதப்படுகிறது. இந்த முதலீடுகள் நாட்டின் உள்கட்டமைப்பு பற்றாக்குறையை நிவர்த்தி செய்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இருப்பினும், இந்த முதலீடுகளின் வெளிப்படைத் தன்மையற்ற ஒப்பந்தங்கள் குறித்தும், நேபாளத்தின் மீது திணிக்கப்படும் அதிகளவான கடன் பளு குறித்தும் கவலைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
சீனாவின் நிதியுதவி அதிக வட்டியை இலக்காக வைத்து கடுமையான விதிமுறைகளுடன் வழங்கப்படுகிறது என்று பொருளாதார விமர்சகர்கள் வாதிடுகின்றனர். இது நேபாளத்தை மீள முடியாத கடன் என்ற ஆழ் கடலில் மூழ்கடித்து விடும் என்று அவா்கள் கருதுகின்றனா்.
நேபாளம், சீனாவின் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டால், அந்த நாடு தனது இறையாண்மையை இழக்க நேரிடும். ஏனெனில், சீனா அந்நாட்டின் மூலோபாய சொத்துக்களையும், உள்கட்டமைப்பு திட்டங்களையும் இலகுவாக கபளீகரம் செய்யும் முயற்சிக்கு இறங்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. சீன முதலீடுகளுக்கு இரையாகி, மீள முடியாத கடனில் மூழகிய சில ஆபிரிக்கநாடுகள் தமது கேந்திர முக்கியத்துவமிக்க இடங்களை கடனுக்கு பகரமாக சீனாவிடம் தாரைவார்த்துக் கொடுத்திருப்பதாக விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.
இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இதே நிலை ஏற்பட்டுள்ளது. கடனை திருப்பிச் செலுத்த வழியின்றி சீனாவின் உதவியினால் நிர்மாணிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அந்த நாட்டுக்கே திருப்பிக் கொடுக்க வேண்டிய துா்ப்பாக்கிய நிலை இலங்கைக்கு ஏற்பட்டதாக பரவலாக கூறப்படுகிறது. இதன் மூலம் இந்து சமுத்திர பிராந்தியத்தில் காலூன்றி நிற்தற்கு சீனாவுக்கு “லைசன்ஸ்” கிடைத்தது.
புவியரசியல் நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில், நேபாளத்தில் கொட்டப்படும் சீன முதலீடுகள் தெற்காசியாவில் அதன் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான ஒரு மூலோபாயமாகவே சில தரப்பினரால் நோக்கப்படுகிறது.
நேபாளத்தில் அதன் பிடியை அதிகரிப்பதன் மூலம், இந்தியாவின் ஆதிக்கத்திற்கு சவால் விடலாம் என சீனா எண்ணுகிறது. பிராந்தியத்தில் தனது மூலோபாய நிலையை வலுப்படுத்துவதற்காக சீனா கண்ணும் கருத்துமாக காய்களை நகா்த்தி வருகிறது.
அரசியல் நிகழ்ச்சி நிரலை அடிப்படையாக வைத்து நேபாளத்தில் கொட்டப்படும் சீன முதலீடுகள், அந்நாட்டின் இருப்பிற்கும், அரசியல் சுதந்திரத்திற்கும் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.
நேபாளம், சீனாவின் புவிசார் அரசியல் நலன்களுடன் இணைந்து நகா்வது பிராந்தியத்திலுள்ள மற்ற நாடுகளுடனான அதன் உறவுகளில் விரிசல்களை நிச்சயம் உருவாக்கத்தான் போகிறது.
நேபாளத்தில் கொட்டப்படும் சீன முதலீடுகள், அந்நாட்டின் வளர்ச்சிக்கான மந்திரமா? அல்லது கடன் பொறி ராஜ தந்திரமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!
– சூரியா

