Last Updated:
அசாமின் சாபுவா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பிரதமர், தேசிய நெடுஞ்சாலை-37 இல் அமைந்துள்ள மோரான் பைபாஸ் பகுதியில் உள்ள அவசர கால தளத்தில் தரையிறங்கினார்.
சீன எல்லை அருகே அசாமின் திப்ருகார் மாவட்டத்தில் இந்திய அரசு அவசர கால தரையிறங்கும் தளம் (Emergency Landing Facility – ELF) அமைத்துள்ளது. இந்தத் தளம் அசாமின் திப்ருகார் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை-37ல், மோரான் பைபாஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் அவசர கால தரையிறங்கும் தளம் இது.
4.2 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த நெடுஞ்சாலைப் பகுதி வலுப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 100 கோடி ரூபாய் செலவில் இந்தத் தளம் சாதாரண சாலைகளைப் போலன்றி, கனரக விமானங்கள் தரையிறங்கும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, 40 டன் எடை வரையிலான போர் விமானங்களையும், 74 டன் வரையிலான அதிகபட்ச எடை கொண்ட சரக்கு விமானங்களையும் தாங்கும் வலிமை கொண்டது. இந்திய விமானப்படை மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) இணைந்து இதனைச் சர்வதேசத் தரத்தில் உருவாக்கியுள்ளன.
போர் காலங்களில் அல்லது எல்லையில் நெருக்கடி ஏற்படும் போது, வழக்கமான விமான நிலையங்கள் இலக்கு வைக்கப்பட்டால், இந்த நெடுஞ்சாலைத் தளங்கள் போர் விமானங்கள் தடையின்றி இயங்க உதவும். வடகிழக்கு மாநிலங்களில் அடிக்கடி ஏற்படும் வெள்ளம் அல்லது நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்களின் போது, நிவாரணப் பொருட்களை விரைவாகக் கொண்டு செல்லவும், மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் இது ஒரு தற்காலிக ஓடுதளமாகச் செயல்படும்.
அவசரத் தேவைகளுக்காக மருத்துவ உபகரணங்கள் அல்லது கனரக இயந்திரங்களை விரைவாக இடமாற்றம் செய்ய இது வசதியாக இருக்கும். எனினும், சாதாரண நேரங்களில் இது பொதுமக்களின் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஒரு விமானம் தரையிறங்க வேண்டிய அவசியம் ஏற்படும் போது நெடுஞ்சாலையின் இருபுறமும் போக்குவரத்து நிறுத்தப்படும். இந்தியாவின் பிற மாநிலங்களான ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்திலும் இதுபோன்ற தளங்கள் ஏற்கனவே வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்று அசாமின் இந்த அவசர கால தரையிறங்கும் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி சி-130ஜே போர் விமானம் மூலம் தரையிறங்கி வரலாற்றுச் சாதனை படைத்தார். அசாமின் சாபுவா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பிரதமர், தேசிய நெடுஞ்சாலை-37 இல் அமைந்துள்ள மோரான் பைபாஸ் பகுதியில் உள்ள அவசர கால தளத்தில் தரையிறங்கினார். இந்த வரலாற்று நிகழ்விற்குப் பிறகு, குவஹாத்தியில் உள்ள லச்சித் காட் பகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். முன்னதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் இயற்கை சீற்றங்களின் போது மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும், நிவாரணப் பொருட்களைக் கொண்டு சேர்க்கவும் இது பெரிதும் உதவும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
Feb 14, 2026 11:43 AM IST


