நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ஆம் தேதி துவங்கியது. துவங்கிய முதல் நாள் முதல் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் அமளியால் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம், ஆபரேஷன் சிந்தூர், நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் இருந்து கட்டுகட்டாக கைப்பற்றப்பட்ட பணம் உள்ளிட்டவற்றை குறித்து விவாதிக்க தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் மக்களவையில் எழுப்பப்படும், பின்னர், மாநிலங்களவையில் அது ஏற்றுக்கொள்ளப்படும். நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்வது கூட்டு அழைப்பாக இருக்க வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம் தொடர்பாக நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். நீதித்துறையில் உள்ள ஊழல் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும், உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்ற நீதிபதிகளை நீக்குவதற்கும் அரசாங்கத்தின் முயற்சிகள் மட்டுமல்ல, முழு நாடாளுமன்றமும் பொறுப்பு என்பதை நாங்கள் தெளிவாகக் கூறியுள்ளோம்.
நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கில், அனைத்து தரப்பினரும் இணைந்து இந்த செயல்முறையை மேற்கொள்ளும். இது அரசாங்கத்தால் மட்டும் எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.
நீதிபதி யஷ்வந்த் வர்மா
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வர்மா இருந்தபோது அவரது வீட்டில் கடந்த மார்ச் மாதம் நள்ளிரவில் தீவிபத்து ஏற்பட்டது. தீயணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டபோது ஒரு அறையில் பாதி எரிந்த நிலையில் மூட்டை மூட்டையாக 500 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு விசாரணை நடத்த உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உத்தரவிட்டார்.
அதன்படி நடந்த விசாரணையில், யஷ்வந்த் வர்மா வீட்டு ஊழியர்கள் மற்றும் சாட்சியங்களின் வாக்குமூலத்தில் முரண்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிகிறது. விசாரணையில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கணக்கில் வராத ரூபாய் நோட்டுகள் இருந்தது உறுதிசெய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில், தன்மீதான விசாரணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு கடந்த 23ஆம் தேதி, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதிகள் கே. வினோத் சந்திரன் மற்றும் ஜோய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
தலைமை நீதிபதி கவாய்
அப்போது தலைமை நீதிபதி கவாய், தான் இந்த விவகாரத்தை விசாரிக்க முடியாது என்றும், வழக்கை விசாரிக்க வேறு ஒரு அமர்வு அமைக்கப்படும் என்றும் தெரிவித்து, இந்த வழக்கில் இருந்து அவர் விலகினார்.
அதேபோல், ஜூலை 28ஆம் தேதி மக்களவையிலும், 29ஆம் தேதி மாநிலங்களவையிலும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து மத்திய அரசு தரப்பில் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவையில் 28ஆம் தேதி நடத்தப்படும் விவாதத்தில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விவாதத்தை துவங்கி வைக்கிறார். இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாஜக எம்.பி.க்கள் அனுராக் தாக்கூர், நிஷிகாந்த் தூபே உள்ளிட்டோரும் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி
அதேபோல், 29ஆம் தேதி மாநிலங்களவையில் நடைபெறும் விவாதத்திலும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இதிலும், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
இரு அவைகளிலும் மொத்தம் 16 மணி நேரம் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர், பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் பரிதாபமாக பலியாகினர். இதனை அடுத்து, இந்திய அரசு, பாகிஸ்தான் மீது ராஜாங்க ரீதியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இதனையடுத்து, பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாதிகளின் 9 நிலைகளைக் குறிவைத்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி கொடுத்தது. இந்தியாவின் தாக்குதலைத் தொடர்ந்து, எல்லை கிராமங்களின் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதனை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தி பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்தது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில், இந்திய விமானங்களும் சேதமடைந்ததாகவும், எல்லை மக்கள் பாதிக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை எழுப்பின. எனவே இது குறித்து விவாதிக்க, சிறப்பு நாடாளுமன்றத்தைக் கூட்டவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இதேபோல், இரு நாடுகளின் இடையேயும் தொடர்ந்து மோதல் வெடித்தது. இதனை அமெரிக்கா தலையிட்டு நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து தெரிவித்துவருகிறார். ஆனால், இந்தியா தரப்பில் அதற்கு மறுப்பு தெரிவித்து வரப்படுகிறது.
தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் துவங்கி நடைபெற்றுவரும் சூழலில், ஆபரேஷன் சிந்தூர், பீகார் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுவரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுவருகின்றன. இதனால், கூட்டம் துவங்கிய கடந்த 21ஆம் தேதி முதல் தொடர்ந்து இரு அவைகளும் முடங்கி வருகின்றன.
இந்நிலையில், வரும் திங்கள் கிழமை (28ஆம் தேதி) மக்களவையிலும், 29ஆம் தேதி மாநிலங்களவையிலும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க இருப்பதாகவும், இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
July 26, 2025 3:16 PM IST
“நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம் மக்களவையில் எடுத்துக்கொள்ளப்படும்” – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவிப்பு

