குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையின்போது நீட் முறைகேடு, மணிப்பூர் கலவரம் மற்றும் அக்னிவீர் திட்டம் குறித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டனர்.
நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் இன்று காலை உரையாற்றினார்.
அப்போது, வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி குறித்து குடியரசுத் தலைவர் பேசியபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மணிப்பூர்.. மணிப்பூர்.. என்று முழக்கமிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
அதேபோல், மத்திய கல்வி நிறுவனங்கள் குறித்து குடியரசுத் தலைவர் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது நீட்.. நீட்.. என்றும், பாதுகாப்புத் துறை குறித்த பேச்சின்போது அக்னிவீர்.. அக்னிவீர்.. என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பினர்.
18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், முதல் இரண்டு நாள்களில் புதிய எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். நேற்று மக்களவைத் தலைவர் தேர்ந்தெடுக்கபட்டார்.
இந்த நிலையில், இன்று மாநிலங்களவைக் கூட்டம் கூடிய நிலையில், மரபுப்படி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார்.

