நீட் நுழைவுத் தேர்வில் விதவிதமாக மோசடி நடந்துள்ள அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. குஜராத்திலும், பிகாரிலும் நீட் தேர்வில் என்ன விதமான மோசடிகள் நடந்துள்ளன என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மே 5ம் தேதி நாடெங்கும் நடந்ததைப் போல குஜராத்தின் கோத்ராவில் உள்ள பர்வாடி கிராமத்தில் உள்ள ஜெய் ஜலராம் பள்ளியிலும் நீட் தேர்வு நடந்தது. அந்த மையத்தில் நீட் தேர்வின்போது மோசடி நடக்கவிருந்த புகாரில் இதுவரை 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதிர வைக்கும் பல உண்மைகள் வெளியாகியுள்ளன. அதன்படி, அந்த தேர்வு மையத்தில் நீட் எழுதும் மாணவர்கள் விடைத்தாளில் பதில் தெரியாத கேள்விகளை நிரப்பாமல் விட்டுவிட வேண்டும். இறுதியாக அந்த மையத்தில் உள்ள ஆசிரியர் சரியான பதிலை டிக் செய்து தருவார்.
இதற்காக மாணவர்களின் பெற்றோரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றதும் தெரியவந்துள்ளது. தேர்வு எழுத வந்த 4 மாணவர்கள் தலா 66 லட்ச ரூபாயை ராய் ஓவர்சீஸ் என்ற பயிற்சி மையத்தின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பியது உறுதி செய்யப்பட்டுள்ளது..
மேலும் 3 மாணவர்கள் தொகையே நிரப்பாத காசோலையையும் இந்த மோசடிக்காக தந்துள்ளனர். இப்படி தேர்வறையிலேயே மாணவர்களுக்கு சரியான விடையை சொல்லிக் கொடுப்பதற்காக 2 கோடியே 82 லட்ச ரூபாயை காசோலையாக பெற்றுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தமிழ்நாட்டைத் தொடர்ந்து கர்நாடகத்திலும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு
மோசடிக்கு பணம் பெற்றதாக கைது செய்யப்பட்டவர்களில் முதன்மையானவரான துஷார் பத், அந்த நீட் தேர்வு மையத்தின் துணை கண்காணிப்பாளராக செயல்பட்டவர். பள்ளி முதல்வர் புருஷோத்தம் ஷர்மா, கல்வி ஆலோசகர் விபோர் ஆனத்திற்கும் இதில் பங்குண்டு. வதோதராவில் நீட் பயிற்சி மையம் நடத்தி வரும் பரசுராம் ராயும் மாணவர்களிடம் பணம் பெற்று இந்த மோசடிக்கு சதித் திட்டம் தீட்டிள்ளார். துஷார் பத்தின் காரில் இருந்து 7 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குஜராத்தில் இப்படி என்றால் பிகாரில் வேறு விதமாக மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அங்கு நீட் வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரத்தில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 13 பேரில் 4 பேர் மாணவர்கள். மற்றவர்கள் பெற்றோர்கள் மற்றும் இடைத்தரகர்கள்.
பாட்னாவில் உள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 35 மாணவர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என கருதப்படுகிறது. தேர்வுக்கு முன்பாக பள்ளி வளாகத்தில் ஒன்று கூடிய அவர்களுக்கு ஒரு கேள்வித்தாள் தரப்பட்டு சோதனை முறையில் தேர்வு ஒன்று நடத்திப் பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:
மீன்பிடி தடைகாலம் முடிந்ததால் மீன் பிரியர்கள் மகிழ்ச்சி… களைகட்டிய மீன் விற்பனை!
பின்பு அந்த வினாத்தாள் எரிக்கப்பட்டதால் அது உண்மையான வினாத்தாளாக இருக்கக் கூடும் என காவலர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். அதோடு, பின்தேதியிட்ட காசோலைகளும் கிடைத்துள்ளதால் இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். விசாரணை முடிவில் மேலும் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
