Last Updated:
பெற்ற மகனை நீட் தேர்வில் வெற்றி பெறும்படி தந்தை தொடர்ந்து நெருக்கடி தந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
உத்தரப்பிரதேசத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற அழுத்தம் தந்த தந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டிய மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் லக்னோவைச் சேர்ந்தவர் மன்வேந்தர் சிங். 49 வயதான இவர் மருந்து மற்றும் மதுபான விற்பனை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரின் மகன் அக்சத் பிரதாப் கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வந்தார். மகள் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 9 ஆண்டுகளுக்கு முன்பு மன்வேந்தர் சிங்கின் மனைவி மரணமடைந்தார். இருந்தபோதும் தனது தொழிலையும் பார்த்துக் கொண்டு, இரு குழந்தைகளையும் படிக்க வைத்து ஆளாக்க படாதபாடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி முதல் தனது தந்தையை காணவில்லை என்று அக்சத் பிரதாப் புகார் கொடுத்துள்ளார். அத்துடன், தனது தந்தை பயன்படுத்திய 3 செல்போன்களும் ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். ஆரம்பத்தில் துப்பு கிடைக்காமல் போலீசார் திக்குமுக்காடியுள்ளனர். அதேவேளையில், புகார் அளித்த அக்சத் பிரசாத், மாறி மாறி பேசியுள்ளார்.
அதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து தங்களது பாணியில் விசாரித்துள்ளனர். விசாரணையில் போலீசாரையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் சம்பவம் அரங்கேறியது அம்பலமானது. தனது மகன் மருத்துவர் ஆக வேண்டும் என்பதற்காக நீட் தேர்வுக்கு தயாராகும் வகையில் படி படி என்று மன்வேந்தர் அழுத்தம் கொடுத்துள்ளார். தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால் ஒரு கட்டத்தில் தந்தையின் கண்டிப்பு, விபரீத முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது.
இது தொடர்பாக சம்பவத்து அன்று அதிகாலையில் தனது மகனை மன்வேந்தர் திட்டியுள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த அக்சத் பிரதாப், வீட்டில் இருந்து துப்பாக்கியை எடுத்து தந்தையை சுட்டுக் கொன்றுள்ளார். பின்னர் உடல் பாகங்களை பல துண்டுகளாக வெட்டி, நீள நிற டிரம்மில் அடைத்துள்ளார். அதில், தலையை மட்டும் துண்டித்து காரில் எடுத்துச் சென்று வீசியுள்ளார்.
பின்னர், வீட்டில் சோதனை செய்த போலீசார் அங்கிருந்த டிரம்மை கைப்பற்றினர். அதற்குள் வெட்டப்பட்ட உடல் பாகங்கள் இருந்ததை கண்டு போலீசார் ஆடிப் போயுள்ளனர். மேலும், தந்தையை தனது தங்கையின் கண் முன்னே அக்சத் பிரதாப் சுட்டுக் கொன்றது விசாரணையில் தெரியவந்தது. உண்மையை வெளியே சொன்னால் உன்னையும் தீர்த்துக் கட்டிவிடுவேன் என துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். உயிர் பயத்தில் அது தொடர்பாக சிறுமி யாரிடமும் வாய் திறக்காமல் இருந்துள்ளார்.
அக்சத் பிரதாப்பை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே கடந்த 2024 ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் முஸ்கான் என்ற பெண், தனது கணவர் சவுரப் ராஜ்புத் என்பவரை கொலை செய்து குலைநடுங்க வைத்தார். ரகசிய காதலன் ஷாஹில் உடன் சேர்ந்து கணவனின் உடலை துண்டு துண்டாக வெட்டி நீள நிற டிரம்மில் அடைத்து வைத்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த கொடூர சம்பவத்தை மிஞ்சும் அளவிற்கு போட்டித் தேர்வுக்கு தயாராக கூறி அழுத்தம் கொடுத்த தந்தையை பெற்ற மகனே சுட்டுக் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி டிரம்மில் அடைத்த சம்பவம் உத்தர பிரதேசத்தையே உலுக்கியுள்ளது.


