அந்தவகையில், இன்றைய டிஜிட்டல் உலகில், ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல்லான OTP என்பது நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. வங்கி பரிவர்த்தனைகள் முதல் ஆப் உள்நுழைவுகள் வரை, ஒவ்வொரு முக்கிய நடவடிக்கைக்கும் OTP தேவைப்படுகிறது. அதே நேரத்தில், OTP மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பலர் “இது கவனக்குறைவாக இருப்பவர்களுக்குத்தான் நடக்கும்” என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதுதான் தவறானது மற்றும் உண்மை அதற்கு நேர்மாறானது.
பெரும்பாலான OTP மோசடிகள் மக்கள் கவனக்குறைவாக இருப்பதால் நிகழ்வதில்லை. அவர்கள் அவசரமாகச் செயல்படுவதாலேயே நிகழ்கின்றன. கண நேரத்தில் எடுக்கப்படும் முடிவு, ஒருவரின் வாழ்க்கை முழுவதுமான சேமிப்பையே இழக்கச் செய்யலாம்.
OTP திருட்டின் மிகவும் சங்கடமான உண்மை என்னவென்றால், இது முட்டாள்தனத்தால் ஏற்படுவதில்லை. மாறாக, மனிதர்களின் இயல்பான நடத்தை, அவசரம், பயம், உதவி செய்யும் மனநிலை போன்றவற்றையே மோசடிக்காரர்கள் தங்களது ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள்.
இன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரையில், OTP என்பது உள்நுழைவதற்கு, பணம் செலுத்துவதற்கு, KYC புதுப்பிக்க, ஒரு பரிவர்த்தனை தோல்வியடைந்ததைச் சரிபார்க்க என அனைத்துக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால், OTP வந்தால், நமது மூளை அதை ஒரு தீவிரமான பாதுகாப்பு எச்சரிக்கையாகக் கருதாமல், சாதாரண அறிவிப்பாகவே எடுத்துக்கொள்கிறது. மோசடிக்காரர்கள் இதைத்தான் பயன்படுத்துகிறார்கள்.
OTP மோசடிகள் பெரும்பாலும் சாதாரணமான விஷயங்களிலிருந்தே ஆரம்பிக்கின்றன. அதாவது, உங்களது டெலிவரி இன்னமும் முடியவில்லை என்கிற ஒரு அழைப்பு, உங்களது பரிவர்த்தனை தோல்வியடைந்தது என்கிற மெசேஜ், நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உங்கள் கணக்கு முடக்கப்படும். இதுபோன்ற எச்சரிக்கைகள், சில நேரங்களில் உதவியாகவும், சில நேரங்களில் அவசரமாகவும், சில சமயங்களில் இரண்டும் கலந்ததாகவும் அந்த தகவல் வரும்.
மேலும், எதிர்புறத்தில் பேசுபவர் அமைதியாகவும், நம்பிக்கை அளிக்கும் விதத்திலும் பேசுவார். அவர்களுக்கு உங்கள் பெயர் தெரிந்திருக்கலாம். நீங்கள் பயன்படுத்தும் வங்கி அல்லது ஆப்கள் குறித்தும் தெரிந்திருக்கலாம். இதனால், இவர் உண்மையிலேயே அதிகாரப்பூர்வ நபர்தான் என்கிற எண்ணம் உங்களுக்குள் உருவாகிறது.
பின்னர் உங்களுக்கு OTP வருகிறது. சரிபார்க்க, திருத்த அல்லது நிறுத்த என்று கூறி அந்த OTP-ஐ கேட்கிறார்கள். ஆனால், அந்த வார்த்தைகள்தான் மிகவும் ஆபத்தானவை. ஏனெனில், அது OTP பகிர்வை ஒரு பாதுகாப்பான செயல்பாடு போல உணர வைக்கிறது.
ஆனால், OTP என்பது பாதுகாப்புக்கான கருவி அல்ல. அது ஒரு ஒப்புதலாகும். OTP-ஐ பகிர்ந்தாலோ அல்லது தவறான இடத்தில் உள்ளிட்டாலோ, அதற்குப் பிறகு நடக்கும் அனைத்தையும் நீங்கள் ஒப்புக்கொண்டதாகவே கணினி கருதும்.
எல்லா OTP மோசடிகளும் தொலைபேசி அழைப்புகள் மூலமாகவே நடைபெறுவதில்லை. பல மோசடிகள் யாருக்கும் தெரியாமல் அமைதியாகவே நடக்கின்றன.
- உண்மையானது போலத் தோன்றும் ஒரு லிங்குடன் ஒரு SMS அல்லது வாட்ஸ்அப் மெசேஜ்.
- அவசரத்தில் அந்த லிங்க்கை தொடுவது.
- உள்நுழையச் சொல்லும் ஒரு போலியான பக்கம்.
- OTP வருகிறது.
- OTP-ஐ உள்ளிடுகிறீர்கள்.
அவ்வளவுதான். அதற்குப் பிறகு உங்கள் கணக்கு உங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது.
மற்றொரு பொதுவான முறையானது ஸ்கிரீன் ஷேரிங். உங்களுக்கு உதவுகிறேன் என்று சொல்லி ஒரு ஆப்பை நிறுவச் சொல்வார்கள். பின்னர், திரை அணுகலை (Screen Access) அனுமதிக்கச் சொல்வார்கள். அந்த ஒரு அனுமதி போதும், பின்னர் உங்கள் போனில் வரும் ஒவ்வொரு OTP-யும் அவர்களுக்குத் தெரியவரும்.
சில சமயம் தவறு இன்னும் எளிதாகவே நடக்கிறது. ஒரு ஆப்பை அவசரமாக இன்ஸ்டால் செய்து, அனுமதிகளைப் படிக்காமலேயே எல்லாவற்றிற்கும் ‘Allow’ கொடுப்பது. வரக்கூடிய தகவல்கள் பற்றிய நோட்டிபிகேஷன்களைப் படிக்கும் அனுமதி கிடைத்தாலே போதும், OTP-ஐ தனியாகப் பகிர வேண்டிய அவசியமே இல்லை, அது தானாகவே திருடப்படுகிறது.
இது போன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க மற்றும் உங்களை முழுமையாகப் பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு OTPயையும், உங்களின் வீட்டுச் சாவியைப் போல நினைத்துக் கொள்ளுங்கள். உங்களது வீட்டுச் சாவி, யாரென்றே தெரியாத ஒரு நபருக்கு கிடைத்தால் உங்கள் வீடு பாதுகாப்பானதாக இருக்காது அல்லவா, அதேபோல்தான் OTP பகிர்தலும் அடங்கும்.
நீங்களாக எந்த அதிகாரப்பூர்வ ஆப் அல்லது இணையதளத்தையும் பயன்படுத்திக் கொண்டிருக்காத நேரத்தில் OTP வந்தால், உடனே நிறுத்துங்கள், எதையும் விளக்க முயற்சிக்க வேண்டாம், யாருடனும் வாதிட வேண்டாம், “ஒரு தடவை மட்டும் சரிபார்க்கலாம்” என்ற எண்ணத்திற்கே இடம் கொடுக்க வேண்டாம், அந்த OTP-ஐ முழுவதுமாக புறக்கணிப்பதே உங்களை பாதுகாக்கும்.
கணக்கு முடக்கம், பணம் திரும்பப் பெறுதல், KYC புதுப்பிப்பு போன்ற காரணங்களுக்காக வரும் லிங்குகளைக் கிளிக் செய்ய வேண்டாம். உண்மையில் சிக்கல் ஏதேனும் இருந்தால், நீங்கள் நேரடியாக ஆப்பைத் திறக்கும்போதே அது தெரியவரும்.
யாராவது அழைப்பில் சொன்னதற்காக ஆப்பை நிறுவவோ, திரை பகிர்வை அனுமதிக்கவோ செய்யாதீர்கள். உண்மையான அல்லது அதிகாரப்பூர்வமான எந்த நிறுவனத்திற்கும் உங்களது திரையைப் பார்க்கத் தேவையில்லை.
முக்கியமாக அவசரப்படாதீர்கள். பெரும்பாலான OTP மோசடிகள் அவசரத்தை நம்பித்தான் இயங்குகின்றன. நீங்கள் ஒரு கணம் நிறுத்தும்போதே, அந்த மோசடி தளரத் தொடங்கும்.
நீங்கள் OTP பகிர்ந்திருக்கலாம் அல்லது சந்தேகத்திற்கிடமான இடத்தில் அதை உள்ளிட்டிருக்கலாம் என்று உணர்ந்தால், காத்திருக்க வேண்டாம்.
- உடனடியாக உங்களது வங்கி கார்டுகளை முடக்குங்கள்.
- வங்கி அல்லது வங்கி ஆப்பில் தகவல் தெரிவியுங்கள்.
- பாஸ்வேர்டை மாற்றுங்கள்.
- பரிவர்த்தனைகளை கவனமாக கண்காணியுங்கள்.
பலர் ஆரம்ப தவறை செய்ததற்காக அல்ல, அதைச் சரிசெய்யத் தயங்கியதால்தான் பணத்தை இழக்கிறார்கள்.

