இலங்கையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பேரிடர் நிலைகளின் போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட அரச அதிகாரிகளுக்கான கொடுப்பனவுகளை வழங்குவது குறித்து பாதுகாப்பு அமைச்சு விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தக் கொடுப்பனவுத் திட்டம் கடந்த 2025 நவம்பர் 21 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐந்து வெவ்வேறு சம்பளப் பிரிவுகளின் கீழ் இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதுடன் கொடுப்பனவு வழங்கப்படுவதற்காக சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
அவசர பேரிடர் பணிகள்
அதன்படி, வார நாட்களில் தங்களின் சாதாரண கடமை நேரத்தைத் தவிர்த்து, ஒரு நாளைக்கு குறைந்தது 4 மணித்தியாலங்கள் அவசர பேரிடர் பணிகளில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 10 நாட்களுக்கு இக்கொடுப்பனவு வழங்கப்படும்.
சாதாரண கடமை நேரத்தைத் தாண்டி 4 மணித்தியாலங்களுக்கு மேல் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு, இந்த விசேட கொடுப்பனவுக்கு மேலதிகமாக, மாதம் அதிகபட்சம் 240 மணித்தியாலங்கள் வரை மேலதிக நேரக் கொடுப்பனவு வழங்கப்படலாம்.

வார இறுதி மற்றும் அரசாங்க விடுமுறை நாட்களில் 8 மணித்தியாலங்கள் பணியாற்றும் அதிகாரிகளுக்கு அவர்களின் மாதச் சம்பளத்தில் 1/30 பங்குக்கு சமமான கொடுப்பனவு வழங்கப்படும்.
அதற்கும் மேலதிகமாக 4 மணித்தியாலங்கள் பேரிடர் பணிகளில் ஈடுபட்டால், விசேட கொடுப்பனவையும் சேர்த்துப் பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சின் செயலாளரால் அறிவிக்கப்படும்
இதேவேளை கிராம உத்தியோகத்தர்களுக்கான விசேட கொடுப்பனவு வழங்குவதற்கான நிபந்தனைகளாக பின்வருவன விதிக்கப்பட்டுள்ளன.
நிர்வாக கிராம உத்தியோகத்தர்களுக்கு ஒரு நாளைக்கு1,500 ரூபாய் மேலதிக கொடுப்பனவு (மாதம் அதிகபட்சம் 10 நாட்களுக்கு) வழங்கப்படும்.

கிராம உத்தியோகத்தர்களுக்கு ஒரு நாளைக்கு 1,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு (விடுமுறை நாட்களில் பணியாற்றுவது விசேட சந்தர்ப்பமாகக் கருதப்பட்டு இக்கொடுப்பனவு வழங்கப்படும்).
2025.11.21 முதல் 2025.12.15 வரையான காலப்பகுதியில் பணியாற்றியவர்களுக்கும், இனிவரும் காலங்களில் அமைச்சின் செயலாளரால் அறிவிக்கப்படும் பேரிடர் காலங்களில் பணியாற்றுபவர்களுக்கும் இது பொருந்தும்.
சொத்து சேத மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 100 ரூபாய் கொடுப்பனவு நேரத்திற்குள் இந்த புதிய கொடுப்பனவு நேரத்தைக் கணக்கிட முடியாது.
பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு இக்கொடுப்பனவுகளை அனுமதிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் பேரிடர் காலங்களில் ஆக்கப்பூர்வமாகப் பணியாற்றினார்கள் என்பதை உறுதிப்படுத்திய பின்னரே இந்தக் கொடுப்பனவுகளை வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

