India
oi-Halley Karthik
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு, சுரங்கத்தை முழுமையாக மூடியிருக்கிறது. இதனால் உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளர்களின் நிலை கேள்விக்குள்ளாகியிருக்கிறது.
உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள பிப்பல்கோட்டி பகுதியில் THDC நீர்மின் திட்டத்திற்காக சுரங்கப்பாதை ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில வியாழக்கிழமை மாலை திடீரென பெய்த கனமழையால், இந்த பகுதியில் பலத்த நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சுரங்கம் முழுவதுமாக மண் மூடியுள்ளது.

இந்த விபத்தின்போது சுரங்கப்பாதைக்குள் சுமார் 20 தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். இவர்கள் அனைவரும் உள்ளே சிக்கிக்கொண்டனர். இதையடுத்து தேசிய பேரிடர் மீட்புப்டையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படையினர், தீயணைப்புதுறையினர் உள்ளிட்டோர் உடனடிாக மீட்பு பணியில் இறங்கினர். முதலில் 10 தொழிலாளர்களும், பின்னர் 8 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கின்றனர்.
மீட்கப்பட்டவர்களில் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதால், அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இன்னும் 2 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கனமழை காரணமாக சுரங்கப்பாதையில் அதிக அளவில் மழைநீர் தேங்கியிருக்கிறது. எனவே, அதை வெளியேற்ற ராட்சத மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும், விரைவில் 2 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்படுவாரகள் என்றும் அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.
இந்த விபத்து குறித்து உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, “மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சிக்கியுள்ள அனைவரையும் பத்திரமாக மீட்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவித்திருக்கிறார்.

