
தற்போதைய ரயில் பொது முகாமையாளரைப் பதவியிலிருந்து நீக்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் ஊழியர் தொழிற்சங்கங்கள் 48 மணி நேர பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.
தற்போதைய புகையிரத பொது முகாமையாளரைப் பதவியிலிருந்து நீக்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் ஊழியர் தொழிற்சங்கங்கள் 48 மணி நேர பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.
இந்தப் பணிப்புறக்கணிப்பு தொடங்குவதற்கு முன்னரே திணைக்களத்தால் பல தூரப் பிரதேச ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைக்கான இரவு தபால் ரயில்கள் மற்றும் மாலை நேர விரைவு ரயில் சேவைகள் இதில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சில ரயில்கள் சேருமிடத்தை அடையும் முன்னரே பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பாக 14 நாட்களுக்கு முன்னரே உரிய அறிவிப்பு விடுக்கப்பட்ட போதிலும், சம்பந்தப்பட்ட அமைச்சர்களோ அல்லது அதிகாரிகளோ தங்களது கோரிக்கைகளுக்குத் தீர்வு காணத் தவறிவிட்டதாக ரயில் எஞ்சின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம். சேனநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்போதைய ரயில் பொது முகாமையாளரின் தலைமைத்துவத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் காரணமாக நாளொன்றுக்கு இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கை 450 இலிருந்து 184 ஆகக் குறைந்துள்ளதாகவும், பருவக்கால பயணச்சீட்டு விநியோகத்தில் நிதி முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் ரயில் எஞ்சின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தங்களது கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்படாவிட்டால் எதிர்வரும் 48 மணி நேரத்துக்கு ரயில் சேவைகளில் பாரிய பாதிப்புகள் ஏற்படும் என தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

