மிரி:
நியாவில் உள்ள தஞ்சோங் பாயுங் சுவாய் எஸ்டேட் அருகே, ஆற்றங்கரையில் தண்ணீர் எடுக்கச் சென்றபோது, முதலை தாக்கியதில் இந்தோனேசிய செம்பனைத் தோட்டத் தொழிலாளி ஒருவர் இன்று உயிரிழந்தார்.
மிரி-பிந்துலு கடற்கரை சாலையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு மையத்திற்கு காலை 11.34 மணிக்கு முதலை தாக்குதல் குறித்து அவசர அழைப்பு வந்தது.
உடனே பத்து நியா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஒரு குழு உடனடியாக சுமார் 44 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது.
மீட்புக் குழு மதியம் 12.19 மணிக்கு நிலையத் தலைவர் பிபிடி II ராரி பின்ஜி தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்தது. அவர்கள் உடனடியாக ஆற்றின் மேல் மற்றும் கீழ் 700 மீட்டர் சுற்றளவு பகுதியை உள்ளடக்கிய தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர்.
முதலை தாக்கியபோது பாதிக்கப்பட்ட முஹ்லிஸ் டென்ட்ரா (வயது 47) என்பவர் இரண்டு சக ஊழியர்களுடன் பூச்சிக்கொல்லி மருந்து தொட்டிகளுக்கு தண்ணீர் சேகரித்துக் கொண்டிருந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
தாக்குதலின் போது முதலை அவரை நீருக்கடியில் இழுத்துச் சென்றது.
பாதிக்கப்பட்டவரின் உடல் மாலை 4.40 மணிக்கு தாக்குதல் நடந்த இடத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது.
பின்னர் மேலதிக நடவடிக்கைகளுக்காக உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.




