பி.ஆர். ராஜன்
நாட்டில் இருதயம்– நுரையீரல் அறுவைச் சிகிச்சைக்கான நிபுணத்துவ மருத்துவர்கள் பற்றாக்குறையை சமாளிப்பதற்கு மடானி அரசாங்கம் ஓர் ஆக்கப்பூர்வமான தீர்வை விரைந்து காண வேண்டும்.
இது மனித உயிர் சம்பந்தப்பட்டது. இதில் சமயம், இனம், அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. நாடு, மக்கள் நலன்களுக்கு முன்னுரிமை தரும் விவகாரங்களில் மேற்குறிப்பிடப்பட்ட எதுவும் குறுக்கே வரக்கூடாது.
அதேசமயம் ஓர் இனத்தின் உரிமைகளும் சலுகைகளும் அபகரிக்கப்படக்கூடாது. இருப்பினும், மனித உயிர் சம்பந்தப்பட்ட மருத்துவத் துறை நிபுணத்துவத்திற்கு வாய்ப்புகள் திறந்துவிடப்படும் பட்சத்தில் அதனை இன ரீதியில் அணுகவும் கூடாது.


யூஐடிஎம் எனப்படும் மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (யூனிவர்சிட்டி டெக்னோலோஜி மாரா) அதன் கதவுகளை பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு திறந்துவிட வேண்டும் என்று மிதவாத மலாய் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
யூஐடிஎம் முழுக்க முழுக்க பூமிபுத்ரா உரிமைப் பெற்றது. இதில் யாருக்கும் எவ்வித ஐயமுமில்லை. பூமிபுத்ரா அல்லாதவர்கள் இந்த உண்மையை மிகத் தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளனர்.
நாட்டின் மருத்துவத் துறையின் இருதய, நுரையீரல் அறுவைச் சிகிச்சை அதீத முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்கிறது. ஒவ்வொரு நோயாளியையும் நிபுணத்துவத்துடன் கவனித்து சிகிச்சை அளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இத்துறை சார்ந்த நிபுணர்கள் அதிகமாகத் தேவைப்படுகின்றனர்.
அண்மையில் இந்த விவகாரம் மிகப் பெரிய ஒரு சர்ச்சையாக மாறியிருக்கிறது. பூமிபுத்ரா உரிமைகளில் தலையிடக்கூடாது. அது குறித்து கேள்வி எழுப்பப்படக்கூடாது என்று அரசியல் கட்சிகள் குறிப்பாக, அம்னோ தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் நிபுணத்துவ மருத்துவக் கல்விக்கான இணை மாற்றுத் திட்டத்திற்கு விரைந்து தீர்வு காண்பதற்குரிய நடவடிக்கையை உயர்கல்வி அமைச்சு முன்னெடுத்திருப்பது ஒரு புதிய நம்பிக்கையைத் தந்திருக்கிறது. தீர்வுக்கான கட்டமைப்பு அட்டர்னி ஜெனரல் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது என்று உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஸம்ரி அப்துல் காடீர் கடந்த மே 27ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு பட்டமளிப்பு விழாவில் தெரிவித்திருக்கிறார்.


இந்த விவகாரத்திற்கு ஒரு சுமூகமான தீர்வு காண்பதற்கு அதற்குரிய பரிந்துரைகள் கட்டமைக்கப்பட்டு மதிப்பீட்டுக்காக அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார்.
உயர்கல்வி அமைச்சு இந்த விவகாரத்தில் எழுந்திருக்கும் சட்ட சிக்கல்களை ஆய்வு செய்வதற்கு அண்மையில் சுகாதார அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
பல்கலைக்கழகங்களில் போதிக்கப்படும் மருத்துவப் பாடத் திட்டங்கள் அங்கீகார விவகாரமும் இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்தப் பட்டப் படிப்பை வழங்கும் பல்கலைக்கழகங்களை அங்கீகரிப்பது தொடர்பான விவகாரமும் விவாதிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு 1971 மருத்துவச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படுவது அவசியமா என்பது குறித்த சட்ட அம்சங்களும் ஆராயப்பட வேண்டிய சூழ்நிலை இருப்பதும் இந்த சந்திப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சட்டத்திற்குட்பட்டு இந்த விவகாரங்களை அணுகி முறையான தீர்வு காண்பதற்கு அது தொடர்பான தேவைகள் அடையாளம் காணப்பட்டு இன்னும் ஆழமாக விவாதிக்கப்பட வேண்டிய அவசியமும் இருப்பதை அமைச்சர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.


இருதயம் – நுரையீரல் மருத்துவத்துறையில் டாக்டர்கள் நிபுணத்துவப் பயிற்சி பெறுவதற்கு யூஐடிஎம் அதன் கதவுகளை பூமிபுத்ரா அல்லாதவர்களுக்குத் திறந்து விடவேண்டும் என்று எம்எம்ஏ எனப்படும் மலேசிய மருத்துவச் சங்கம் ஒரு கோரிக்கையை முன்வைத்தைத் தொடர்ந்து நிபுணத்துவ மருத்துவக் கல்விக்கான இணைமாற்றுத் திட்டம் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது.
நான்கு இருதய – நுரையீரல் அறுவைச் சிகிச்சை மருத்துவர்கள் எடின்பெர்க் அறுவைச் சிகிச்சை அரச கல்லூரியில் அத்துறையில் நிபுணத்துவக் கல்வியை மேற்கொள்வதற்கு தேசிய நிபுணத்துவ பதிவகப் பட்டியலில் இடம் பெறவேண்டும் என்ற கோரிக்கையை எம்எம்சி எனப்படும் மலேசிய மருத்துவ மன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து எம்எம்ஏ இக்கோரிகையை முன்வைத்தது.
இதற்கு எம்எம்சி முன்வைத்த காரணம் எடின்பெர்க் அறுவைச் சிகிச்சை நிபுணத்துவ கல்லூரியின் இருதய– நுரையீரல் அறுவைச் சிகிச்சைக் கல்வி அங்கீகரிக்கப்படவில்லை என்பதாகும்.
இந்நிலையில் இந்த விவகாரத்தை பொதுமக்கள் அல்லது எந்தவொரு தரப்பினரும் பெரிதுப்படுத்தக்கூடாது. அல்லது தவறாக வியாக்கியானம் செய்யக்கூடாது. இந்த விவகாரத்திற்கு தீர்வு காணும் முயற்சியில் தற்போது அரசாங்கம் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்க வேண்டும்.
யூஐடிஎம் தற்காலிகமாகத்தான் இந்த திட்டத்திற்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நீண்ட காலத் திட்டமாக தேசிய இருதய சிகிச்சைக் கழகம் (ஐஜேஎன்)– மலாயாப் பல்கலைக்கழகம் இணை ஏற்பாட்டில் நிபுணத்துவ மருத்துவக் கல்விக்கான இணை மாற்றுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் பொதுமக்களும் இது சம்பந்தப்பட்டிருக்கும் அனைத்துத் தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும். நடப்பது அனைத்தும் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மையைக் கொண்டு வரட்டும்.


