Last Updated:
லாலு பிரசாத் யாதவ், சுஷில் மோடி போன்ற சமகாலத் தலைவர்களைப் போலவே நான்கு அவைகளிலும் உறுப்பினராக இருந்தவர் என்ற பெருமையைப் பெற நிதிஷ் விரும்புகிறார்.
பிகார் அரசியலில் சுமார் 20 ஆண்டுகாலமாக முதலமைச்சராக ஆதிக்கம் செலுத்தி வந்த நிதிஷ் குமார், இப்போது மாநில அரசியலில் இருந்து விலகி மீண்டும் டெல்லிக்கு இடம்பெயர்கிறார்.
2005-ஆம் ஆண்டு முதல் பிகார் மாநில முதலமைச்சராக இருந்து வருகிறார் நிதிஷ் குமார். 2014- ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்தின் மோசமான தோல்வி காரணமாக 9 மாதங்கள் முதலமைச்சர் பதவியை ஜிதன் ராம் மஞ்சியிடம் ஒப்படைத்திருந்தார். அதன் பிறகு தொடர்ந்து முதலமைச்சர் நாற்காலியை அலங்கரித்து வருகிறார். அடிக்கடி கூட்டணிகளை மாற்றி இரண்டு முறை ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணிக்கு சென்றுவிட்டு மீண்டும் பாஜகவுக்குத் திரும்பினார். ஐக்கிய ஜனதா தளம் கட்சி மாநிலத்தில் தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்து வந்தபோதிலும், நிதிஷ் குமார் தான் பிகார் முதலமைச்சராக இருப்பார். கடந்த ஆண்டு பிகாரில் நடந்த தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து. இதில் பாஜக மட்டும் 89 இடங்கள் வென்றது. நிதிஷ் குமார் கட்சி 84 தொகுதிகளை கைப்பற்றியது.
நிதிஷ்குமார்
பாஜக தனிப்பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்தாலும் ஆட்சி அதிகாரத்தை நிதிஷ் குமார் கையில் ஒப்படைத்தது. இதற்கு காரணம் தேர்தலுக்கு முன், நிதிஷ் குமாரை முதலமைச்சர் வேட்பாளர் என அறிவித்து பரப்புரை மேற்கொண்டதுதான். ஆனால் இப்போது அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் டெல்லி அரசியலை நோக்கி நகர்கிறார். இதற்காக அவர் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
கடந்த சில ஆண்டுகளாகவே நிதிஷ் குமாரின் உடல்நிலை குறித்த தகவல்கள் விவாதங்களை ஏற்படுத்தி வருகின்றன. 75 வயதாகும் அவருக்கு, மாநில நிர்வாகத்தின் கடும் அழுத்தத்தைக் குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நிதிஷ் குமார் ஏற்கனவே மக்களவை, பிகார் சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவை ஆகியவற்றில் உறுப்பினராக இருந்துள்ளார். மாநிலங்களவைக்கு மட்டும் அவர் சென்றதில்லை. லாலு பிரசாத் யாதவ், சுஷில் மோடி போன்ற சமகாலத் தலைவர்களைப் போலவே நான்கு அவைகளிலும் உறுப்பினராக இருந்தவர் என்ற பெருமையைப் பெற நிதிஷ் விரும்புகிறார்.
மோடி மற்றும் நிதிஷ் குமார்
அடுத்த முதலமைச்சராக யாருக்கெல்லாம் வாய்ப்பு?
பிகாரில் நீண்டகாலமாக நிதிஷ் குமாருக்கு ஆதரவு அளித்து வரும் பாஜக, இப்போது அங்கு தனது சொந்த முதலமைச்சரை அமர்த்த விரும்புகிறது. நிதிஷ் குமார் விலகுவதால், பிகார் வரலாற்றில் முதல்முறையாக பாஜகவைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராகப் பதவியேற்பார். இந்த பட்டியலில் முன்னணியில் இருப்பது சாம்ராட் சவுத்ரி, தற்போது துணை முதலமைச்சராக உள்ள, பிகார் பாஜகவின் செல்வாக்குமிக்க தலைவர்களில் ஒருவர்.
மற்றொருவர் நித்யானந்த் ராய். மத்திய இணை அமைச்சராக இருக்கும் இவர், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு மிகவும் நெருக்கமானவர். பிகார் மாநில அமைச்சராக இருக்கும் திலிப் குமார் ஜெய்ஸ்வாலுக்கும் முதலமைச்சராகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. நிதிஷ் குமார் தனது மகன் நிஷாந்த் குமாரை அரசியலில் முன்னிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வலம் வருகின்றன. நிஷாந்த் குமாரும் நிதிஷ் குமாரை போலவே, பிகார் சட்டமேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என தெரிகிறது.


