Last Updated:
தெலங்கானா பாபூஜி நகரில், உமாசங்கர் மீது திருமணத்தை மறுத்த பவித்ரா, தாயின் கண்முன் கத்தியால் கொலை செய்யப்பட்டார்.
தெலங்கானாவில் நிச்சயிக்கப்பட்ட பின்னர் திருமணத்துக்கு மறுத்த சிறுமியை புதுமாப்பிள்ளை கத்தியால் குத்திச் கொலை செய்த சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது.
தெலங்கானா மாநிலம் வாராசிகுடா அருகே பாபூஜி நகரில் தங்கி கட்டட வேலை செய்து வந்த தம்பதிக்கு 17 வயதில் பவித்ரா மற்றும் 15 வயதில் ரேவதி என்ற இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பவித்ரா 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். 18 வயது பூர்த்தியாவதற்கு முன்பே பவித்ராவுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து அண்மையில் சிறுமியின் சொந்த அத்தை மகனான உமாசங்கர் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
நிச்சயதார்த்தத்துக்கு முன்பு அந்த இளைஞர் மிகவும் நல்லவர் போல் தன்னை காட்டிக் கொண்டுள்ளார். அதன் பின்னர் தான் அவரின் சுயரூபம் பெண் வீட்டாருக்கு தெரியவந்துள்ளது. மது போதைக்கு அடிமையான உமாசங்கர், சாம்பாதிக்கும் பணத்தை எல்லாம் சூதாட்டத்திலேயே தொலைத்துள்ளார். அதை அறிந்து அச்சம் கொண்ட பெண் வீட்டார், திருமணத்தை நிறுத்த முடிவு செய்துள்ளனர். பெற்றோரின் முடிவை ஏற்றுக்கொண்ட சிறுமி, தொடர்ந்து படிப்பதற்கு சிக்கல் வராது என மகிழ்ச்சியடைந்துள்ளார். ஆனால், இளைஞர் உமாசங்கர் அடிக்கடி பெண் வீட்டிற்கு சென்று அனைவரையும் மிரட்டியுள்ளார்.
இந்த நிலையில் பவித்ரா, அவரது தாயார் லட்சுமியுடன் வீட்டில் இருந்துள்ளார். அங்கு, சென்ற இளைஞர் சிறுமியை தனியாக அழைத்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். வீட்டிற்கு மருமகன் வந்ததால் அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுப்பதற்காக சிறுமியின் தாயார் சமையல் அறைக்கு சென்றுள்ளார். அந்த நேரம் பார்த்து, ஆத்திரத்தில் இருந்த உமாசங்கர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பவித்ராவின் கழுத்தில் பலமுறை குத்தியுள்ளார்.
இதனால் வலி தாங்க முடியாமல் சிறுமி அலறி துடித்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த லட்சுமி, தனது மகள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். அருகில் இருந்தவர்களும் வந்ததை பார்த்து உமாஷங்கர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். பின்னர், அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிய பவித்ராவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய உமாசங்கரை பிடிக்க தேடுதல் வேட்டையில் இறங்கினர். இதையடுத்து, மொபைல் சிக்னல் மூலம் பத்மாராவ் நகரில் பதுங்கியிருந்தவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். நிச்சயிக்கப்பட்ட இளைஞர் மது போதைக்கு அடிமையானவர் என தெரிந்ததும் திருமணத்துக்கு மறுத்த சிறுமியை, தாயின் கண் முன்னே புதுமாப்பிள்ளை கத்தியால் குத்திச் கொலை செய்த சம்பவம் தெலங்கானாவில் குலைநடுங்க வைத்துள்ளது.
December 12, 2025 4:39 PM IST
நிச்சயத்துக்கு பின் திருமணத்துக்கு மறுத்த சிறுமி.. புதுமாப்பிள்ளை செய்த கொடூர செயல்.. பகீர் சம்பவம்!


