1823ம் வருடத்தின் பின் ஏற்பட்ட மலையக மக்களின் புலம்பெயர்வு காலத்திலேயே நாவலப்பிட்டியில் முத்துமாரியம்மன் ஆலயம் அமைக்கப்பெற்றிருந்தமைக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
குயின்ஸ்பெரி தோட்டத்தில் நவநாத சித்தர், நாவலப்பிட்டிக்கு அருகாமையிலுள்ள குயில்வத்தை தோட்டத்தில் நாகநாத சித்தர் ஆகியோரது அபரீத செயற்பாடுகள் கவனிக்கத்தக்கது. 1870 காலப்பகுதியில் கோயில் அமையப்பெற்றுள்ள இடத்தில் கிழக்கு முகம் பார்த்த நிலையில் கோயில் அமையப்பெற்றுள்ளது. கொரக்காவத்தை தோட்டத்தின் தொழிலாளர்களும் நகர வர்த்தகர்களும் இணைந்து அமைக்கப்பட்ட அவ் ஆலயத்திற்கு முன்னால் தற்போது காணப்படும் வைத்தியசாலையும் அமையப்பெற்றுள்ளது. இவ் ஆலயத்தில் காணப்படும் குஸ்டரோக நோயினால் அவதியுற்ற நோயாளி ஒருவரை இரவு வேளையில் பயணித்த நவநாதர் சித்தர் அவரை கண்டு வைத்தியசாலைக்கு முன்பு இருக்கும் அம்மனின் அருளால் அது குணமாகும். என்னுடன் வாருங்கள் என குயின்ஸ்பெரிக்கு அழைத்து சென்றுள்ளார். அவரின் பேச்சைக் கேட்டு சென்ற குறிப்பிட்ட நோயாளிக்கு குயின்பெரி செல்லும் முன்பே அவரது நோய் குணமாகியது தொடர்பில் செவிவழியாக கதைகள் உள்ளன.
தொள்ளாயிரம் ஆண்டின் முற்பகுதியில் சன்னியாசி ஒருவர் நாவலப்பிட்டிக்கு வருகை தந்துள்ளார். இவ் ஆலயத்தின் செயற்பாடுகளில் பொறுப்பாக இருந்த அப்பாவு ஆச்சாரி, வேலு ஆச்சாரி ஆகியோரை சந்தித்து தான் சமயபுரயத்தில் இருந்து வருவதாக கூறியுள்ளார். இவ் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டதுடன் சமயபுரத்தில் இருந்து கொண்டு வந்த அம்மனின் திருமுகத்தை இவ் ஆலயத்தில் வைத்து கொடுத்துவிட்டு தான் சுகவீனமடைந்திருப்பதால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற போவதாக கூறி விட்டு சென்றுள்ளார். விக்கிரகத்திற்குறிய பூசைகளை உரியவாறு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கமைய வேலு ஆச்சாரியினுடைய வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜித்துள்ளார்கள். பின்னர் ஆச்சாரிகள் இருவரும் குறித்த சன்னியாசியைத் தேடி வைத்தியசாலைக்குள் சென்ற போது அவ்வாறு ஒருவர் வரவில்லை என வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளதாக அறியக்கிடைக்கிறது. மாறாக சிகிச்சைப் பெற்று மீளவும் வருகைத்தந்து வேலு ஆசாரியின் வீட்டில் அச் சிலை பூஜிக்கப்பட்ட முறையை அவதானித்து மகிழ்ச்சியுற்று ஆலயத்தில் வைத்து பூஜை செய்யுமாறு ஆலோசனை வழங்கிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. எது எவ்வாறாயினும் சமயபுர அம்பாளின் அனுகிரகத்தால் அம்மனே இயலபாக அருள் பாலிக்க வந்துள்ளதான நம்பிக்கை இப் பிரதேசத்தில் நிலவுகிறது. குறித்த அமமனின் தலை உருவம் இன்னமும் இவ் ஆலயத்தில் பூஜிக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். அதன் பின்னர் ஆச்சாரிகள் இருவர் உட்பட பிரமுகர்கள் இணைந்து அவ் ஆலயத்தை நிரந்தர கட்டிடமாக அமைக்க முற்பட்டுள்ளார்கள்.
கோப்பி பயிரச்செய்கை அதன் பின்னர் கோப்பி பயிர்ச் செய்கையில் பாதிப்பை ஏற்படுத்திய நோய் நிலைமை, பிளேக் நோய் பரவல் போன்ற காரணங்களோடு நாவலப்பிட்டியில் இந்திய வமசாவளி தமிழர்கள் தொடர்பு படுகிறார்கள். நாவலப்பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ள கொத்மலை வீதியிலுள்ள கடைகள், வீடுகள் கொடூர பிளேக் நோயினால் பாதிக்கப்பட்ட காரணத்தினால் அப் பகுதியில் வசித்தவர்கள் அப் பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளார்கள். இவ்வாறு அப்புறப்படுத்தப்பட்டவர்கள் தற்போது ஐ.டீ.எச் பிரதேசத்தில் வைத்தே பராமரிக்கப்பட்டார்கள். இப் பகுதிக்கு அக் காலத்தில் வைக்கப்பட்ட பெயரே இது வரையில் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது. அப் பகுதியில் அருகிலேயே அக் காலத்திலும் பொது மையவாடியும் அமைக்கப்படடிருந்தமை குறிப்பிடத்தக்கது. கொத்மலை வீதியில் அப்புறப்படுத்த வேண்டிய பட்டியலில் கோயில் கட்டிடமும் உள்வாங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பணியில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் தயங்கினார்கள். கோயிலையும் உடைக்க வேண்டும் என்ற ஆங்கிலேயே பொது சுகாதார ஊழியரும் பணிக்கவே அருகில் இருந்தவரகள் உடைக்க வேண்டாம் என மன்றாடியுள்ளார்கள். வேலையாட்கள் ஒதுங்கிய நிலையில அப் பணியை பொது சுகாதார உத்தியோகத்தரே செய்வதற்கு துணிந்துள்ளார். அவரினால் கதவு உடைக்கப்பட்ட போது பார்த்தவர்கள் அதிசயிக்கும் வகையில் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இரண்டு மாதமளவில் மூடி வைக்கப்பட்டிருந்த கருவறையில் காலையில் பூ வைத்து அலங்கரித்தது போன்றும் இரண்டு மாதத்திற்கு முன்னர் ஏற்றி வைத்த விளக்கும் எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்து அனைவரும் வியந்துள்ளார்கள். குறித்த பொது சுகாதார உத்தியோகத்தரும் கோயிலை உடைக்க வேண்டாம் என கூறி வழிபட்டுள்ளார்.
அருணாசலம் லெட்சுமணன்

