Last Updated:
“நான் கொல்லப்படலாம், ஆனால் என் மக்களுக்காக வங்கதேசம் திரும்புகிறேன்” என வங்கதேசம் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அறிவித்துள்ளார்.
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்து பெரும் வன்முறையாக மாறியது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா அங்கிருந்து தப்பித்து இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
அதனைத் தொடர்ந்து வங்கதேசத்தில் இடைக்கால அரசு, பின் தேர்வு செய்யப்பட்ட அரசு என அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. அதேசமயத்தில் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்ப வேண்டும் எனும் வலியுறுத்தல்களும் எழுந்தன. இருந்தாலும், ஷேக் ஹசீனா தொடர்ந்து இந்தியாவில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் ஷேக் ஹசீனா இன்று, “நான் நாடு திரும்புகிறேன். நான் கொல்லப்படலாம் ஆனால், என் மக்களுக்காக நான் சேவை செய்ய விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
ஷேக் ஹசீனா தெரிவித்திருப்பதாவது; “எனக்கு என்ன விதி காத்திருந்தாலும், நான் என் மக்களிடம் திரும்புவேன். என் அன்புக்குரிய நாட்டு மக்கள் துன்புற்றுக் கொண்டிருக்கும் வேளையில் என்னால் விலகி இருக்க முடியாது. நான் டிசம்பரில் வங்கதேசத்திற்கு திரும்பிச் செல்ல விரும்புகிறேன்.
அவர்கள் என்னைக் கொல்லலாம், சிறையில் அடைக்கலாம், அரசியல் உள்நோக்கத்துடன் புனையப்பட்ட வழக்குகளை என் மீது சுமத்த முயற்சிக்கலாம். ஆனால், இந்த அச்சுறுத்தல்களின் காரணமாக நான் என் மக்களுக்கான கடமையை செய்வதை தடுக்க முடியாது.
1971-இல் நான் என் தாயுடன் சிறையில் இருந்தேன். சிறைவாசத்தின்போது என் மகன் ஜாய் பிறந்தான். 1975-இல் நான் என் குடும்பத்தை இழந்தேன். நான் ஆறு ஆண்டுகள் நாடு கடத்தப்பட்ட நிலையில் வாழ்ந்தேன். மக்களின் பக்கம் நின்று, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவ வேண்டும் எனும் ஒரே ஒரு நோக்கத்திற்காக வங்காளதேசத்திற்குத் திரும்ப நான் விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

