India
oi-Velmurugan P
கொல்கத்தா: இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலத்தை சீனா நீண்ட காலமாக சொந்தம் கொண்டாடி வருகிறது. அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு தனி காகித விசா வழங்குவது, அவர்களை தங்கள் மக்கள் என்று கூறுவது என்று நீண்ட காலமாக இந்தியாவை வம்பிழுத்து வருகிறது சீனா. ஆனால் இந்தியா, அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று திட்டவட்டமாக கூறிவருகிறது. இந்த சூழலில் அருணாச்சல பிரதேச மக்களை முக அமைப்பை காட்டி சீனர்கள் என்று தவறாக முத்திரை குத்துவது நடக்கிறது. அதற்கு தான் ஒரு குழந்தை அருமையான பதிலை கூறியுள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள், நாட்டின் பிற மாநிலங்களுக்கு வேலைக்காகவும், கல்விக்காவும் செல்கிறார்கள். அப்படி அவர்கள் வேறுமாநிலங்களில் வசிக்கும் போது, சிலர் அவர்களின் முக அமைப்பைக் காரணம் காட்டி தவறாக அவர்களைச் “சீனர்கள்” என்று அழைக்கிறார்கள். இப்படியான இன ரீதியான பாகுபாட்டை எதிர்கொள்வது அவர்களை காயப்படுத்தி வருகிறது.

இந்த சூழலில் அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர், “நாங்களும் இந்தியர்கள்தான், எங்களைச் சீனர்கள் என்று அழைக்காதீர்கள்; அது எங்களுக்குப் பெரிய மனவேதனையைத் தருகிறது” என்று உருக்கமாகப் பேசும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்தக் பதிவைப் பகிர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மகுவா மல்கோத்ரா அந்தச் சிறுமிக்கு ஆதரவாக, “நீங்கள்தான் இந்தியாவின் உண்மையான அடையாளம் மற்றும் இதயம்” என்று கூறி சிறுமியின தேசப்பற்றை வெகுவாக பாராட்டி உள்ளார். அதேபோல் வடகிழக்கு மாநில மக்கள் அனைவரும் எதிர்கொள்ளும் இந்த பொதுவான பிரச்சனைக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக ஜெய் மணிப்பூர் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மகுவா மல்கோத்ரா கூறியுள்ளார்.
சீனாவின் நிலைப்பாடு என்ன
சீனா, அருணாச்சல பிரதேச மாநிலத்தை “ஜங்னான்” என்றும் “தெற்கு திபெத்” என்றும் அழைத்து வருகிறது. வரலாற்று ரீதியாக இது திபெத்தின் ஒரு பகுதி என்று கூறும் சீனா, இந்த பகுதியில் எங்கள் ஆன்மீக தலங்கள் உள்ளதால், தங்களுக்கே சொந்தம் என உரிமை கோரி வருகிறது. அதேபோல் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வரையறுக்கப்பட்ட ‘மெக்மோஹன் எல்லைக் கோட்டை’ சீனா இன்று வரை அதிகாரப்பூர்வமாக ஏற்கவே இல்லை. அதேபோல் சீனா சில அடவாடி வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறது. குறிப்பாக அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்குத் தங்கள் மொழியில் சொந்தமாகப் பெயர்களைச் சூட்டி வரைபடங்களை வெளியிடுவது மற்றும் இந்தியத் தலைவர்கள் அங்குப் பயணம் மேற்கொள்ளும்போது கடுமையாக எதிர்ப்புத் தெரிவிப்பது போன்ற செயல்களை செய்து வருகிறது. மேப்பிலும் அருணாச்சல பிரதேசத்தை தவறாகவே சீனா காட்டி வருகிறது.
My little darling girl- you are India. You are our pure soul, our heart. You are what makes us love our country. Jai Hind. Jai Manipur pic.twitter.com/DkMJFIorLp
— Mahua Moitra (@MahuaMoitra) August 20, 2026
இந்தியாவின் நிலைப்பாடு என்ன
அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத மாநிலம் என்று இந்தியா பல ஆண்டுகளாக திட்டவட்டமாக கூறி வருகிறது. அருணாச்சல பிரதேச மக்களுமே இந்தியர்கள் என்றே பெருமிதத்துடன் கூறி வருகிறார்கள். இந்திய அரசமைப்பின் கீழ் வாக்களிக்கம் மக்கள், தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து சீனாவிற்கு பதிலடி கொடுக்கிறார்கள். அருணாச்சல பிரதேசத்தில் உள்கட்டமைப்பு மற்றும் எல்லைப் பாதுகாப்பை இந்தியா தொடர்ந்து வலுப்படுத்தியபடியே இருக்கிறது. அதேபோல் சீனா தன்னிச்சையாக இடங்களின் பெயர்களை மாற்றுவதையும், புதிய மேப் வெளியிடுவதையும் கடுமையாக கண்டித்து வரும் இந்தியா, “பெயர்களை மாற்றுவதால் மட்டுமே அருணாச்சலம் சீனாவின் பகுதியாக மாறிவிடாது” என்று பதிலடி கொடுத்து வருகிறது.

