தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வட இந்தியாவில் இருந்து குழந்தைகளை கடத்தி தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் விற்பதாக அதிர்ச்சிகர தகவல் ஒன்று ஐதராபாத் போலீசாருக்கு கிடைத்தது. அதன்பேரில் தொடங்கப்பட்ட அதிரடி சோதனையில் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்த சோபாராணி, ஹேமா, ஹரிஹரன் உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், பிடிபட்டவர்களிடம் பெறப்பட்ட தகவல்கள் மூலம் அவற்றை விற்ற இடத்தில் இருந்து 13 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். தொடர் விசாரணையில் குழந்தை கடத்தல் சம்பவத்தின் அதிர்ச்சிகரமான திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்துள்ளன. விசாரணையில், அந்த கும்பல் வட இந்தியாவில் குழந்தைகளை கடத்தி தென் இந்தியாவில் விற்று வந்துள்ளனர். கடத்தப்பட்ட குழந்தைகளை கமிஷன் அடிப்படையில் வாங்கி, ஒரு குழந்தைக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் முதல், 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை விற்றுள்ளனர். குழந்தைகளை தம்பதியிடம் பேரம் பேசி விற்க அதற்கென தனி புரோக்கர்களும் பணியமர்த்தப்பட்டது தெரியவந்தது.
குழந்தைகளை விற்பனை செய்து கொடுக்கும், புரோக்கர்களுக்கு ஒரு குழந்தைக்கு ஐம்பதாயிரம் ரூபாய் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை கமிஷன் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. குழந்தைகளை கடத்தி தென்னிந்தியாவில் சப்ளை செய்த வட இந்தியாவை சேர்ந்த முக்கிய சப்ளையர்கள் கிரன், ப்ரீத்தி ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.
அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்ய தேவையான தீவிர நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். முக்கிய சப்ளையர்கள் சிக்கினால் மட்டுமே குழந்தை கடத்தல் கும்பலின், நெட்வெர்க் குறித்து வெட்ட வெளிச்சமாகும். இதுவரை 50 குழந்தைகள் கடத்தப்பட்டதாக தெரியவந்துள்ள நிலையில் அதில் 13 குழந்தைகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:
Electric Vehicle | ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் மின்சார கார்களுக்கான வாகனப்பதிவு திடீர் நிறுத்தம்?
பணம் கொடுத்து குழந்தைகளை வாங்கிய சிலர் குழந்தைகள் அபகரிக்க வேண்டாம் என கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மீதமுள்ள குழந்தைகள் எங்கே? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், மீட்கப்பட்ட குழந்தைகள் அரசு குழந்தைகள் காப்பகத்தில் வைக்கப்பட்ட நிலையில் குழந்தைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வட இந்தியாவில் கடத்தப்பட்ட 50 குழந்தைகளில் 13 குழந்தைகள் மீட்கப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
