நாட்டில் இணையவழி நிதி மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புத்தாண்டு காலப்பகுதியில் இணையவழி பணப்பரிமாற்றங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், பொதுமக்களை ஏமாற்றி முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் குறித்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொருளாதார கஷ்டங்கள் காரணமாகவும், உடனடி நிதி இலாபங்களை எதிர்பார்த்தும் இவ்வாறான மோசடிகளில் பொதுமக்கள் சிக்குண்டுள்ளதாக கடந்த காலங்களில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் அவதானிக்கப்பட்டுள்ளது.
குறுஞ்செய்திகள் ஊடான மோசடிகள்
இது குறித்து காவல்துறை தெரிவிக்கையில், புத்தாண்டு காலப்பகுதியில் பொருட்கள் கொள்வனவு மற்றும் கொடுக்கல் வாங்கல்களுக்காக பொதுமக்கள் அதிகளவில் இணையதளங்களைப் பயன்படுத்துகின்ற நிலையில், இதனைச் சாதகமாகப் பயன்படுத்தும் மோசடிக்காரர்கள், தரவுகளைத் திருடி பணத்தை அபகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி, புத்தாண்டு சலுகைகள் மற்றும் பரிசுகள் தொடர்பான போலி அறிவிப்புகள், போலியான வங்கி இணையதளங்கள் மற்றும் வங்கி செயலிகளைப் புதுப்பிக்குமாறு கோரும் செய்திகள், போலியான கியூ.ஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்யத் தூண்டுதல், மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகள் ஊடாக முன்னெடுக்கப்படும் மோசடிகள் என்பன குறித்து அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான மோசடிகள் ஊடாக தனிப்பட்ட தரவுகளைப் பெற்று, வங்கி கணக்குகளிலுள்ள பணத்தை திருடும் அபாயம் உள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் எச்சரித்துள்ளது.
எனவே, இணையதளம் ஊடாக பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ளும் போதும், அறிமுகமில்லாத இணைய இணைப்புகளை அழுத்தும் போதும் மிகுந்த அவதானத்துடனும் விழிப்புணர்வுடனும் செயற்படுமாறு காவல்துறை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

