நாடு முழுவதும் Telegram செயலி முடக்கம்: நீட் மறு தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு அதிரடி!!
இந்தியாவில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்பட இளநிலை மருத்துவ படிப்புகளில் சோ்வதற்கு நீட் நுழைவு தேர்வு கட்டாயம். நாடு முழுவதும் நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு அதன் மதிப்பெண் அடிப்படையில் தான் கல்லூரியில் சீட் கிடைக்கும். இந்த நீட் நுழைவு தேர்வில் பல கெடுபிடிகள் கடைபிடிக்கப்படும். மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட ஆடை அணிந்து தான் வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் உண்டு.
தேர்வு அறைக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்படும் போதும் முழுமையாக பரிசோதனைக்கு ஆளாவார்கள். இத்தனை கெடுபிடிகள் நடந்தாலும் நீட் தேர்வு மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. இந்த ஆண்டுக்கான நீட் தோ்வு கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் வினாத்தாள் கசிவு காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் முன் கூட்டியே நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது வெளிச்சத்துக்கு வந்தது.

வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், இதில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நீட் மறுதேர்வு வருகிற ஜூன் 21 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் மறு தேர்வு வினாத்தாளும் டெலிகிராமில் பரவியதாக தகவல் வெளியானது. ஆனால் அது போலியான செய்தி என நீட் தேர்வினை நடத்தும் தேசிய தேர்வு முகமை அறிவித்தது.
இந்நிலையில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்தியாவில் டெலிகிராம் (Telegram) செயலியை தற்காலிகமாக முடக்கியுள்ளது. இந்த தடை ஜூன் 22 வரை நீடிக்கும் என அறிவித்துள்ளது. ஜூன் 21 ஆம் தேதி நடக்கும் நீட் மறுதேர்வில் எவ்வித முறைகேடுகளும் இல்லாமல், பாதுகாப்பாக நடத்துவதற்காகவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சில மோசடி கும்பல்கள் டெலிகிராமில் போலியான சேனல்களை உருவாக்கி, “எங்களிடம் நீட் மறுதேர்வுக்கான ஒரிஜினல் வினாத்தாள் உள்ளது” என்று கூறி மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் பணம் பறிக்க முயன்று வருவதாக சொல்லப்படுகிறது. டெலிகிராமில் பழைய மெசேஜ்களை எடிட் செய்தாலும், அது அனுப்பப்பட்ட பழைய நேரமே (Timestamp) காட்டும் வசதி உள்ளது. இதைப்பயன்படுத்தி தேர்வு முடிந்த பிறகு, பழைய மெசேஜை மாற்றி “நாங்கள் தேர்வுக்கு முன்பே வினாத்தாளை கசியவிட்டோம்” என்று போலியான ஆதாரங்களை உருவாக்கி வதந்திகளைப் பரப்ப திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் டெலிகிராம் செயலியை முடக்கியதோடு, அதன் ‘மெசேஜ் எடிட்டிங்’ வசதியையும் ஜூன் 30 வரை முடக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வினை நடத்தும் தேசிய தேர்வு முகமை (NTA) அரசின் இந்த முடிவை வரவேற்றுள்ளது. இதனால் சாதாரண டெலிகிராம் பயனாளர்களுக்கு தற்காலிகமாகச் சிரமம் ஏற்படும் என்றாலும், லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் மற்றும் நீட் தேர்வின் நம்பகத்தன்மையைப் பாதுகாக்க இந்த குறுகிய கால தடை மிகவும் அவசியம் என விளக்கம் அளித்துள்ளது.
தேசிய தேர்வு முகமை வரும் 21ஆம் தேதி திட்டமிட்ட படி நீட் மறு தேர்வு கண்டிப்பாக நடக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் அதிகாரப்பூர்வ பக்கங்கள் மற்றும் அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும் என கேட்டு கொண்டுள்ளது.

