Last Updated:
பஞ்சாபியர்கள் மட்டுமே சட்டவிரோதமாக குடியேறுகிறார்கள் என்ற கருத்தை மத்திய அரசு உருவாக்க நினைக்கிறதா என்று முதலமைச்சர் பகவந்த் மான் கேள்வி எழுப்பி இருந்தார்.
நாடு கடத்தப்படும் இந்தியர்களை அமிர்தசரஸில் கொண்டு வந்து விடுவது ஏன் என புதிய சர்ச்சை கிளம்பிய நிலையில், அருகில் உள்ள விமான நிலையம் என்பதே அதற்கு காரணம் என பாஜக விளக்கம் தந்துள்ளது.
அமெரிக்காவுக்கு சென்று செட்டிலாகிவிட வேண்டும் என கனவை நிறைவேற்ற முறையாக விசா கிடைக்காவிடில், வடமேற்கு மாநிலத்தவர்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கும் வழி கழுதை பாதை. லட்சக்கணக்கில் பணத்தை ஏஜெண்டுகளுக்கு கொடுத்து விமானம், படகு வழியாகவும் பல கிலோ மீட்டருக்கு நடந்தும் பாலைவனம், மலை, கடல் என ஆபத்தான பாதைகளை கடந்தும் மேற்கொள்ளும் இந்த கழுதை பாதை, பலருக்கும் எதிர்பார்த்த எதிர்காலத்தை தருவதில்லை.
மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் நுழையும் போதே சட்டவிரோத குடியேற்ற முயற்சி என அமெரிக்க காவல்துறை அவர்களை சிறை பிடித்துவிடுவது வாடிக்கை. அப்படி அண்மையில் கைதான இந்தியர்கள், ட்ரம்ப் அதிபரான பிறகு நாடு கடத்தப்பட்டு வருகிறார்கள். கடந்த வாரம் 104 இந்தியர்கள், அமெரிக்க விமானப்படை விமானம் மூலம் பஞ்சாப்பின் அமிர்தசரஸ் குரு ராம் தாஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வந்து விடப்பட்டனர்.
இரண்டாம் கட்டமாக நாடு கடத்தல் நடவடிக்கைக்கும் அமிர்தசரஸே தேர்ந்தெடுக்கப்பட்டது, பஞ்சாப் மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பஞ்சாப் மக்களை இழிவுப்படுத்தும் நடவடிக்கையாக அம்மாநில அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.
எந்த அடிப்படையில் அமிர்தசரஸ் விமானத்தை தரையிறக்க தேர்வு செய்யப்பட்டது என்பதை வெளியுறவு அமைச்சகம் விளக்க வேண்டும் என்று முதலமைச்சர் பகவந்த் சிங் மான் வலியுறுத்தி இருந்தார். பஞ்சாபியர்கள் மட்டுமே சட்டவிரோதமாக குடியேறுகிறார்கள் என்ற கருத்தை மத்திய அரசு உருவாக்க நினைக்கிறதா என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.
பொதுவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைய கழுதை பாதையை பஞ்சாப், ஹரியானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் தான் அதிகம் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. அதனால் தான் பஞ்சாப் தேர்ந்தெடுக்கப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டது.
இதையும் படிக்க: ரயில் நிலையத்தில் நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழப்பு… டெல்லியில் சோகம்!
அதே சமயம், கடந்த முறை நாடு கடத்தப்பட்டவர்களில் அதிகபட்சமாக இருந்தவர்கள் ஹரியானா மற்றும் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இரண்டு மாநிலங்களில் இருந்தும் தலா 33 பேர் இந்தியா வந்தடைந்தனர். அடுத்தப்படியாக தான் 30 பேருடன் பஞ்சாப் மூன்றாம் இடம் பிடித்திருந்தது. இதுதான், நாடு கடத்தப்பட்டவர்களை அழைத்து வர ஹரியானா, குஜராத்தைத் தரையிறங்கும் இடமாக ஏன் தேர்வு செய்யவில்லை என்று கேள்வியை பஞ்சாப் அரசு முன்வைக்க காரணமாக மாறி உள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்குள் நுழையும் விமானங்களுக்கு அமிர்தசரஸ் தான் மிக அருகில் உள்ள சர்வதேச விமான நிலையம் என பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஆர்.பி. சிங் விளக்கம் தந்துள்ளார். பொது அறிவு இன்றி இந்த விவகாரத்தை அரசியலாக்குவதையும் சதி கோட்பாடுகளை ஊக்குவிப்பதையும் நிறுத்திக்கொள்ளுங்கள் என்றும் அவர் முதலமைச்சர் பகவந்த் சிங் மானுக்கு பதிலளித்துள்ளார்.
February 16, 2025 8:44 AM IST
“நாடு கடத்தும் இந்தியர்களை அமிர்தசரஸில் விடுவது ஏன்..?” – பஞ்சாப் முதலமைச்சர் கேள்விக்கு பாஜக பதில்


