Last Updated:
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. மத்திய அரசு 8 மசோதாக்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்கம் விவகாரம் முக்கியமாகும்.
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கவுள்ளது.
வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரில், 8 மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த கூட்டத் தொடரில் அறிமுகம் செய்யப்பட்டு நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பப்பட்ட வருமான வரி மசோதா, இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், அவரை பதவி நீக்கம் செய்யவும் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க நேற்று டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இதில், பெஹல்காம் தாக்குதல், இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தலையீடு, பிகாரில் மேற்கொள்ளப்படும் வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு திருத்தம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
மேலும், தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப இருப்பதாக திமுக எம்.பி. டி.ஆர்,பாலு தெரிவித்துள்ளார். இதே போன்று, கீழடி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் என அதிமுக எம்.பி. தம்பிதுரை கூறியுள்ளார். இதுபோல பல பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேச எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.
July 21, 2025 6:27 AM IST


