கோலாலம்பூர்:
நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் மாறாக சொந்த நலனுக்கு அல்ல என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் இப்ராகிம் இஸ்கந்தர் வலியுறுத்தியுள்ளார்.


நாட்டில் நிலவும் விவகாரங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் அரசியல் லாபத்துக்குப் பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று, நேற்று நடந்த 15வது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வின் முதல் கூட்டத்தில் உரையாற்றியபோது, அவர் இதைத் தெரிவித்தார்.


மேலும் தேசிய ஒற்றுமையை நிலைநாட்டும் முன்மாதிரிகளாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டும், அதைவிட்டுவிட்டு நாட்டு மக்களிடையே பிளவை ஏற்படுத்துபவர்களாக இருக்கக்கூடாது என்றார் அவர்.


“கடுமையான வாக்குவாதம், இழிவுப்படுத்துவது, பொய்ச் செய்திகளைப் பரப்புவது ஆகியவற்றுக்கான இடம் நாடாளுமன்றம் அல்ல. நாடாளுமன்றம் என்பது நாட்டு மக்களின் நலன், தேசத்தின் செழுமை ஆகியவை தொடர்பான விவகாரங்களைக் கலந்துரையாடும் புனிதமான தளமாகும். எனவே, அனைத்து விவகாரங்களையும் அரசியலாக்கி கட்சியின் நலனை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு செயல்படும் பழக்கத்தைக் கைவிட்டுவிடுங்கள்,” என்று மாமன்னர் இப்ராகிம் கூறினார்.


