மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்ற புதிய எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்கு வரும்போது என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் என்பதை இங்கு பார்க்கலாம்.
நாடு முழுவதும் 543 தொகுதிகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. அதில் பல புதிய முகங்கள் எம்.பி.க்களாக முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நாடாளுமன்றத்திற்கு முதன்முறையாக வரும்போது, உறுப்பினர் பதிவு செய்யப்படும். அவ்வாறு உறுப்பினர் பதிவு செய்யப்படும்போது சில முக்கிய ஆவணங்களை அவர் நாடாளுமன்ற அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்தலில் வெற்றிபெற்ற எம்.பி.க்கு, அவர் போட்டியிட்ட தொகுதியில் நியமிக்கப்பட்டிருந்த மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி, வெற்றிச் சான்றிதழை வழங்கியிருப்பார். அதுதான் அவரது வெற்றியை உறுதிப்படுத்திய சான்றிதழ் ஆகும். மாவட்ட ஆட்சியரின் கையெழுத்துடன் இருக்கும் அந்த வெற்றிச் சான்றிதழை நாடாளுமன்ற உறுப்பினர் டெல்லிக்கு வரும்போது எடுத்து வர வேண்டும்.
எம்.பி.க்கு வெற்றிச் சான்றிதழை கொடுக்கும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட நீதிபதிக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் இந்த சான்றிதழின் நகல்களை அனுப்பி வைத்திருப்பார். அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் வெற்றிபெற்ற எம்.பி.க்களின் பட்டியலை தயாரித்து மக்களவை செயலகத்திற்கு அனுப்பி வைக்கும்.
குறிப்பாக, புதிய எம்.பி. நாடாளுமன்ற உறுப்பினராக பதிவு செய்வதற்கு குறைந்தபட்சம் 2 நாட்களுக்கு முன்பாக, இந்த நகல்கள் டெல்லி மக்களவை செயலகத்திற்கு வந்துவிட வேண்டும். அது இல்லாமல் எம்.பி. சத்தியப் பிரமாணம் செய்ய முடியாது. இருப்பினும், ஒரு எம்.பி. வெற்றிபெற்றதும், அவர் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மக்களவை செயலகம் சேகரித்துவிடுகிறது. குறிப்பாக, வெற்றிபெற்றதற்கான சான்றிதழையும், அவரது ஆதார் அட்டையையும் இந்த கண்காணிப்புக் குழு முதலில் பெற்றுக்கொள்ளும்.
இதையும் படிக்க:
பாஜகவின் கோட்டையாக கருதப்படும் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி சாதித்தது எப்படி?
ஏனெனில், மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனே டெல்லியில் உள்ள மக்களவை செயலகம் தனது பணியை தொடங்கி, ஒரு புதிய எம்.பி.யை வரவேற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யத் தொடங்குகிறது. இதற்காக, மக்களவை செயலகம் பயிற்சியளிக்கப்பட்ட பல குழுக்களை நியமிக்கிறது. இந்த குழு ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஏற்ப வகையில் பிரிக்கப்படுகிறது.
இந்த குழு முதலில் வெற்றிபெற்ற புதிய எம்.பி.க்களை தொடர்புகொண்டு அவர்கள் எப்படி டெல்லிக்கு வர விரும்புகிறார்கள் என்ற விவரத்தை அறிந்து, அதற்கு ஏற்றவகையில் விமானம் அல்லது ரயில்களில் முன்பதிவு செய்ய உதவுகிறது. அதன்பிறகு அவர்களுக்கான தங்குமிடம், உணவு மற்றும் பதவியேற்பு போன்றவற்றுக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறது. ஒரு சில எம்.பி.க்கள் தங்களது சொந்த செலவில் டெல்லிக்கு வருவார்கள். ஆனாலும், அதற்கான தொகையை மக்களவை செயலகம் திருப்பிக் கொடுத்துவிடும்.
இதையும் படிக்க:
எம்.பி.க்களின் மாதச் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? அவர்களுக்கு என்ன சலுகைகள் கிடைக்கும்?
டெல்லிக்கு வரும் புதிய எம்.பி.க்கள் அரசு தங்கும் விடுதிகள் அல்லது அசோகா ஹோட்டலில் தங்கவைக்கப்படுவார்கள். பதவியேற்பு விழா வரை அனைத்தையும் இந்த குழு கவனித்துக் கொள்ளும். பதவியேற்புக்கு பின்னர் எம்.பி.க்களுக்கு அரசு விடுதி ஒதுக்கப்படும். ஆனாலும், அவர்களுக்கு விடுதி ஒதுக்க குறைந்தபட்சம் ஒரு மாதம் வரை ஆகிவிடும்.
ஒரு எம்.பி. பதவியேற்ற பிறகு அவருக்கு அடையாள அட்டை மற்றும் அனைத்து ஆவணங்களும் வழங்கப்படும். அத்துடன் அலுவலகங்கள் அமைப்பதற்கும், அங்கு பணியாளர்களை நியமிப்பதற்கும், வங்கிக் கணக்கு தொடங்குவதற்கும், தங்குவதற்கும் தேவையான தொகை வழங்கப்படும். அவரது சம்பள விவரமும் பதவியேற்புக்கு பின்னரே தெரிவிக்கப்படும். குறிப்பாக, அவர் பதவியேற்கும் நாளில் இருந்துதான், அவரது பதவிக்காலம் தொடங்கும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
