Last Updated:
நாக்பூர் கலவரம் தொடர்பாக 104 பேர் அடையாளம் காணப்பட்டு, 92 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளி ஃபஹிம் கானின் சட்டவிரோத வீடு புல்டோசரால் இடிக்கப்பட்டது.
முகலாய மன்னரான அவுரங்கசீப், தனது கடைசி காலத்தில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வாழ்ந்து மறைந்தார். அவரது உடல் சாம்பாஜி நகர் மாவட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டு, கல்லறை எழுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என்பது தொடர்பான பிரச்சனை மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பாகியுள்ளது.
இது தொடர்பாக சில நாள்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், “வீடியோக்கள் மற்றும் சிசிடிவி மூலம், நாக்பூர் கலவரத்தில் ஈடுபட்டவர்களில் 104 பேர் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளனர். இதில் 12 சிறுவர்கள் உட்பட 92 நபர்கள் மீது தற்போது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாக்பூர் கலவரத்தில் சேதமடைந்த உடமைகளால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய கலவரக்காரர்களிடம் இருந்து அதற்கான நஷ்ட ஈடு பணம் வாங்கப்படும். ஒருவேளை அவர்கள் பணம் தரவில்லை என்றால், நஷ்டத்தை ஈடு செய்ய அவர்களின் சொத்துக்கள் விற்பனை செய்யப்படும். தேவைப்படும் இடங்களில் புல்டோசர்கள் பயன்படுத்தப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.
இதையும் படியுங்கள் : நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்… நாடாளுமன்றத்தை முடக்கிய எதிர்க்கட்சிகள்
இந்நிலையில், நாக்பூர் கலவரத்தின் முக்கியக் குற்றவாளி என சொல்லப்படும் ஃபஹிம் கான் என்பவர் வீடு சட்டவிரோதமாக கட்டப்பட்டிருப்பதாக கூறி, அந்த வீடு புல்டோசரால் இடிக்கப்பட்டது.
நாக்பூர் கலவரத்தின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஃபஹிம் கான், இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்துவருகிறார். பாக் காலனி பகுதியில் இவருக்கு சொந்தமான இரட்டை அடுக்கு வீடு ஒன்று உள்ளது. இந்த வீடு, நாக்பூர் முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டிருப்பதாகவும், அதனால் வீடு இடிக்கப்படுவதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
மார்ச் 20ஆம் தேதி நாக்பூர் முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரிகள், ஃபஹிம் கானின் வீட்டை ஆய்வு செய்தபோது, மகாராஷ்டிரா மாநில மற்றும் நகர திட்டம் சட்டம் 1966-ஐ மீறி வீடு கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
March 24, 2025 4:24 PM IST


