மும்பை: மகாராஷ்டிராவின் நவி மும்பை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள், ஒரு சிறுமி உட்பட 4 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர்.
நவி மும்பையின் வாஷி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது மாடியில் நள்ளிரவுக்குப் பின் சுமார் 12.30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பின்னர், தீ 11 மற்றும் 12வது மாடிகளுக்கும் பரவியுள்ளது. இது குறித்த தகவல் கிடைத்ததும் 8 தீ அணைப்பு வாகனங்களில் 40 தீயணைப்பு வீரர்களும் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். அதிகாலை 4 மணி அளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரி ஒருவர், “தீ விபத்தில் இரண்டு பெண்கள், ஒரு ஆண், 6 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி ஆகிய 4 பேர் உயிரிழந்துள்ளனர். 14 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் வாஷி பகுதியில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் சிலர் வீடு திரும்பி உள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது” என தெரிவித்தனர்.