Last Updated:
வாழ்க்கையே முடிந்துவிட்டது என்ற நிலையில், தனது இரண்டாவது திருமணத்திற்குப் பிறகே ஷர்மிளாவிற்கு ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது. தனது 34-வது வயதில் தடகள விளையாட்டுத் துறையைத் தேர்வு செய்த அவர், தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டார்
வரதட்சனை கொடுமை மற்றும் 2 பெண் குழந்தைகளை பெற்றதற்காக கணவர் வீட்டில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி, காமன்வெல்த் போட்டியில் குண்டு எறிதலில் தங்கம் வென்று நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளார்.
கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில், குண்டு எறிதலில் மாற்றுத்திறனாளிகளுக்கான F57 பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனை ஷர்மிளா தன்கர், 9.81 மீட்டர் தூரம் குண்டை எறிந்து தங்கப்பதக்கத்தை தட்டித் தூக்கினார்.
ஹரியானா மாநிலம் மகேந்தர்கர் மாவட்டத்தை சேர்ந்த ஷர்மிளா, தனது 2 வயதில் போலியோ நோயால் பாதிக்கப்பட்டு வலது காலை இழந்தார். 10 ஆம் வகுப்பு முடித்தவுடன் திருமணம் செய்து வைக்கப்பட்ட ஷர்மிளா, வரதட்சனை கொடுமைக்கு ஆளானார். அது மட்டுமின்றி 2 பெண் குழந்தைகளை பெற்றெடுத்ததால், கணவர் வீட்டாரின் பல்வேறு கொடுமைகளையும் எதிர்கொண்ட ஷர்மிளாவை, ஒரு நாள் நள்ளிரவு முழுவதும் அவரது கணவர் ஆடையின்றி அடித்து வீட்டை விட்டு விரட்டினார். அதன் பிறகு, 2 ஆவது திருமணம் செய்த ஷர்மிளா, தனது 34 ஆவது வயதில் விளையாட்டுத்துறையை தேர்வு செய்து, தற்போது தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். ஆசிய விளையாட்டு மற்றும் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே தனது இலக்கு என்று ஷர்மிளா தன்கர் தெரிவித்துள்ளார்.
நள்ளிரவில் விரட்டப்பட்ட பெண்… இன்று காமன்வெல்த்தில் தங்கம்… ஷர்மிளா தன்கர் சாதனை வரலாறு | Inspirational Story


