Last Updated:
கோட்டயம் அரசு நர்சிங் கல்லூரியில் 5 சீனியர் மாணவர்கள் ராகிங் கொடுமை செய்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கேரள மாநிலம், கோட்டயம், காந்திநகர் பகுதியில் அரசு நர்சிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தக் கல்லூரியில் நடந்து வந்த ராகிங் கொடுமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்தக் கல்லூரியில் படிக்கும் ஐந்து சீனியர் மாணவர்களுக்கு, திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் என்றாலே பிடிக்காது என சொல்லப்படுகிறது. இதன் காரணமாக வகுப்புகளுக்கு போகும்போதும் வரும் போதும் திருவனந்தபுரம் மாணவர்களை துன்புறுத்துவார்கள் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
ராகிங் எனும் பெயரில் சீனியர் மாணவர்கள் 5 பேர் செய்யும் அட்டகாசம் எல்லை மீறி போயிருக்கிறது. அவர்கள் முதலாமாண்டு மாணவர்களை நிர்வாணமாக நிற்க வைத்து வார்த்தைகளால் சொல்ல முடியாத பல்வேறு கொடுமைகளை செய்துள்ளனர். விரல் நகங்களுக்கு இடையே ஊசியால் குத்தி அலற விட்டுள்ளனர். காம்பஸால் பின்புறத்தில் குத்தி ரசித்துள்ளனர். மாணவர்களை கட்டிலில் நிர்வாணமாக கட்டி வைத்து அவர்களது காயங்களில் தோல் சுருக்கங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிச்சல் மிகுந்த லோஷன்களை தடவி விட்டுள்ளனர்.
இதனால் மாணவர்கள் எரிச்சல் தாங்க முடியாமல் கத்தி கூச்சலிட்டதை கண்டு ரசித்துள்ளனர். மேலும் அந்த லோஷனை முகம், தலை மற்றும் வாய் உள்ளிட்ட இடங்களிலும் தேய்த்துவிட்டு கொடுமைப் படுத்தியுள்ளனர். சில மாணவர்களுக்கு வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்து போதையில் தள்ளாட வைத்துள்ளனர். மாணவர்கள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதை வீடியோ எடுத்து பணம் கேட்டும் மிரட்டியிருக்கின்றனர்.
சீனியர் மாணவர்களின் இந்த ராகிங் கொடுமை சுமார் 4 மாதங்களுக்கு தொடர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிலர் துணிந்து கல்லூரியின் ராகிங் எதிர்ப்புக் குழுவிடம் தகவல் தெரிவிக்க ரகசியமாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சில செல்போன் வீடியோக்கள் மற்றும் காயங்களை வைத்து ராகிங் நடைபெற்றிருப்பதை உறுதி செய்தனர் அந்த குழுவினர்.
உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த கோட்டயம் போலீசார் வாக்குமூலங்களை பதிவு செய்து குறிப்பிட்ட அந்த 5 சீனியர் மாணவர்களை கைது செய்தனர். கோட்டயத்தை சேர்ந்த சாமுவேல், விவேக், வயநாட்டை சேர்ந்த ஜீவா, மலப்புரத்தை சேர்ந்த ரிஜில்ஜித், ராகுல்ராஜ் ஆகிய 5 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட 5 மாணவர்களையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. அரசு நர்சிங் கல்லூரியில் அரங்கேறியிருக்கும் இந்த ராகிங் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
February 13, 2025 8:23 PM IST


