நம் வீடுகளில் இருப்பது வெள்ளியா? வெறும் இரும்பா?- திட்டமிட்டு நடத்தப்பட்ட ரூ.500 கோடி மோசடி..!!
இந்திய மக்கள் தங்கத்துக்கு அடுத்ததாக அதிகமாக வாங்கும் ஒரு பொருள் வெள்ளி. வழக்கமாக வெள்ளியில் கொலுசு, செயின், தோடு என அணிகலன்களாகவும் பாத்திரம், பூஜை பொருட்கள் உள்ளிட்டவற்றையும் தான் நாம் அதிகமாக வாங்கி பயன்படுத்துகிறோம். ஆனால் அவை அனைத்தும் உண்மையிலேயே வெள்ளியா அல்லது வெறும் இரும்பா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவின் மிக முக்கியமான ஆன்மீக தலங்களில் ஒன்று ஜம்மு காஷ்மீரில் இருக்கும் வைஷ்ணோ தேவி ஆலயம். இங்கே வருகை தரும் பக்தர்கள் அருகே உள்ள கடைகளில் வெள்ளி நாணயங்கள் மற்றும் ஆபரணங்களை வாங்கி, இறைவனுக்கு நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர். இவ்வாறு பல ஆண்டுகளாக பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட சுமார் 20 டன் எடையுள்ள வெள்ளி பொருட்களை கோயில் நிர்வாகம் சுத்திகரிக்கவும், கட்டி வெள்ளியாக மாற்றவும் அரசுக்கு சொந்தமான ஒரு மிண்டிற்கு அனுப்பியுள்ளது.

இந்த வெள்ளியின் மதிப்பு சுமார் 500 கோடி ரூபாய் இருக்கும் என நிர்வாகம் எதிர்பார்த்தது. ஆனால், மிண்ட் தரப்பில் வெளியான தகவல்கள் கோயில் நிர்வாகத்திற்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த நாட்டிற்குமே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயில் நிர்வாகம் வழங்கிய 20 டன் வெள்ளியில் வெறும் 5% முதல் 6% வரை மட்டுமே உண்மையான வெள்ளி இருப்பது தெரிய வந்துள்ளது. மீதமுள்ள 94% க்கும் அதிகமான பொருட்கள் வெறும் இரும்புத் துகள்களும், கேட்மியம் (Cadmium) மற்றும் துத்தநாக உலோகக் கலவைகளுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி பார்த்தால் கோயில் தரப்பில் கொடுத்த வெள்ளியின் உண்மையான மதிப்பு வெறும் 30 கோடி ரூபாய் மட்டுமே ஆகும்.
அதுமட்டுமில்லாமல் வெள்ளி என்ற பெயரில் விற்கப்பட்ட பொருட்களில் கலக்கப்பட்டிருந்த கேட்மியம் அதிக நச்சுத்தன்மை கொண்டது. இதை உருக்கும்போது புற்றுநோயை உண்டாக்கக்கூடிய நச்சு புகை வெளியேறும் என்பதால், மிண்ட் அதிகாரிகள் முதலில் இதை உருக்க மறுத்துவிட்டனர். இறைவனுக்கு செலுத்தும் காணிக்கை என்பதால், பக்தர்கள் யாரும் வெள்ளியின் தூய்மையை சரிபார்ப்பதோ அல்லது ஜிஎஸ்டி ரசீது கேட்பதோ இல்லை. இந்த பலவீனத்தை நகைக்கடைக்காரர்கள் தங்களுக்கு சாதகமாக்கி கொண்டார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இது ஏதோ ஒரு தனி நபரின் செயல் அல்ல, பல ஆண்டுகளாகத் திட்டமிட்டே நடத்தப்பட்ட ஒரு பெரிய மோசடி என்றும் சிலர் கூறுகின்றனர். குறிப்பாக கடந்த ஆண்டு இறுதியில் வெள்ளி விலை பல மடங்கு அதிகரித்தது. அதுவும் 2024ஆம் ஆண்டுக்கு பின் 3 மடங்கு விலை உயர்ந்தது. வெள்ளி விலை ஏற ஏற, இரும்பு மற்றும் கேட்மியம் கலந்து லாபம் பார்க்கும் கும்பல் இன்னும் தீவிரமாக செயல்பட்டு போலி வெள்ளியை உண்மையான வெள்ளியின் விலைக்கு விற்று லாபம் பார்த்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியா ஆண்டுக்கு 7,000 முதல் 8,000 டன் வெள்ளியை பயன்படுத்துகிறது. இது தங்கத்தின் நுகர்வை விட 10 மடங்கு அதிகம். ஆனால் சந்தையில் கிடைக்கும் அனைத்துமே உண்மையான வெள்ளி தானா என்பது தான் கேள்வி. வைஷ்ணோ தேவி ஆலயத்திற்கு வழங்கப்பட்ட காணிக்கையிலேயே 95% போலியாக இருக்கும்போது, இந்தியாவின் லட்சக்கணக்கான வீடுகளில் இன்று பூஜையறைகளிலும், லாக்கர்களிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் வெள்ளியின் தரம் என்ன? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
எனவே பொதுமக்கள் எப்போது வெள்ளி வாங்கினாலும் ஹால்மார்க் குறியீடு இருப்பதையும் உரிய ரசீதை பெற்று வாங்குவதையும் உறுதி செய்ய வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். குறிப்பாக வெள்ளி பொருட்கள் வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர்.

