ஏறத்தாழ அரை நூற்றாண்டுகளுக்கு மேல் இந்து சமயத்தை வளர்க்க பாடுபட்டு வரும் இந்து சங்கத்திற்கு தற்போது தேவை அங்கீகாரம்தான் என்று 43ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் சிறப்புரையின்போது இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் ஶ்ரீ காசி சங்கபூஷண் தங்க கணேசன் தெரிவித்தார். நாங்கள் என்ன செய்தாலும் சிலர் குறைக்கூறிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
சமீபத்தில் தலைநகரில் ஆலயம் உடைப்படும் என்று பிரச்சினை எழுந்தபோது உடனே இந்து சங்கம் எதுவுமே செய்யவில்லை என்று கூறினர். ஆனால் அந்த ஆலயம் ஒரு குடும்பத்தினரால் வழிநடத்தி வந்தனர் என்பது எத்தனை பேருக்கு தெரியும். அந்த ஆலயத்திக்கான இடம் வழங்கப்பட்டபோது அரசாங்கம் கேட்டால் அந்த நிலத்தை வழங்கிவிட வேண்டும் என்பதோடு அந்த ஆலயத்திற்காக ஏன்ற் இழப்பீடும் வழங்கப்படப்படாது என்ற நிபந்தனையுடன் அந்த இடம் வழங்கப்பட்டது என்பதனை இங்கு தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.
அதே வேளை நமது பிரதமர் நமக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார் என்பது நமக்கு மகிழ்ச்சியான விஷயமாக அமைந்திருக்கிறது. அந்த வகையில் தற்போது திருமுறை விழாவிற்கு 50,000 ரிங்கிட்டை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். பிரதமர் மேலும் நிதியுதவி வழங்கத் தயாராக இருக்கிறார். ஆனால் அரசாங்கம் வழங்கும் நிதியுதவிக்கு கட்டாயம் கணக்கு அறிக்கையை வழங்க வேண்டும். அதனால் வட்டாரங்களும் மாநிலங்களுக்கு தாங்கள் செய்யும் செலவுகளுக்கு கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.
மேலும் ஆண்டுதோறும் மதமாற்றம் குறித்து பேசி வருகிறோம். ஆனால் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். அதனை சமாளிக்க பெற்றோர் தங்களின் பிள்ளைகளின் அடையாள அட்டையை அவ்வபோது சோதனை செய்து கொண்டால் ஓரளவு பிரச்சினைக்குத் தீர்வுக் காணலாம் என்றார்.
தொடர்ந்து உரையாற்றிய மாநிலத் தலைவி பாலாமணி சுப்ரமணியம் கூட்டரசுப் பிரதேசத்தில் இருக்கும் பதிவு பெறாத ஆலயங்கள் உடனடியாக இந்து சங்கத்தை அணுகுமாறு கேட்டுக் கொண்டார். ஏனெனில் ஆலயங்கள் 100 ஆண்டுகள், 50 ஆண்டுகள் என்று கூறுகிறோம். ஆனால் அதற்கான ஆதாரங்களை கேட்டால் நம்மிடம் இல்லை. பிறகு எவ்வாறு நாம் நமது ஆலயங்களை காப்பாற்ற முடியும். வருமுன் காப்பதற்கு நம்மால் ஆன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதை விடுத்து ஆலயம் உடைப்படும்போது இந்து சங்கத்தை நாடினால் பெரிதளவில் உதவி செய்ய முடியாமல் போகிறது. மேலும் நம்மவர்களுக்கு போதுமான சமயக் கல்வி இல்லாததே மதமாற்றத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது என்பதனை யாரும் மறுக்க முடியாது. நாம் ஆலயங்களுக்குச் செல்வது குறைந்து வருகிறது. அப்படியே சென்றாலும் குடும்பத்துடன் செல்வது மிகவும் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும்.
தொடர்ந்து உரையாற்றிய மாநில துணைத்தலைவர் கணேஷ் பாபு, தலைவர்கள் மாறுவார்கள். ஆனால் சங்கம் என்றென்றும் நிலைத்திருக்கும். அதனால் நம்மை நாமே குறைகூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அண்மையில் முன்னாள் தேசியத் தலைவர் ஒரு கூட்டத்தில் பேசியது எனக்கு மட்டுமல்ல. அங்கு கூடியிருந்த அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது. அதனால் இனிவரும் காலங்களில் இதுபோன்ற பேச்சுகளை தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும் இந்து சங்கத்தில் சேவையாற்றிய மாணிக்கம், கரிமுத்து, கிருஷ்ண மூர்த்தி, நாகம்மா, செல்வராஜு ஆகியோருக்கு தொண்டர்மணி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.




