
க. அகரன்
நண்பனின் 11 வயது மகளைப் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய நபருக்கு 40 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. ஏ. ஆனந்தராஜா திங்கட்கிழமை (11) அன்றுதீர்ப்பளித்துள்ளார்.
வவுனியா – தரணிக்குளம் பிரதேசத்தில் தாயினால் கைவிடப்பட்டுத் தந்தையின் பராமரிப்பின் கீழ் இருந்த 11 வயதுடைய சிறுமியை கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில், பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய 36 வயது நிரம்பிய நபருக்கு எதிராக, வவுனியா பொலிஸாரால் 2016 ஆம் ஆண்டு வவுனியா நீதிவான் நீதிமன்றில் ‘B’ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த வழக்கு விசாரணைகளின் தொடர்ச்சியாக, குறித்த எதிரிக்கு எதிராக 2025 ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றப் பத்திரிகை வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
எதிரி தலைமறைவாகியிருந்த நிலையில், எதிரி இல்லாமலே வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. எதிரிக்கு எதிராக அரச சட்டவாதியால் நெறிப்படுத்தப்பட்ட சாட்சிகள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில், வழக்குத் தொடுநர் தரப்பு குறித்த குற்றச்சாட்டுகளைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாகத் தெரிவித்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. ஏ. ஆனந்தராஜா, குறித்த எதிரிக்கு 40 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார். அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 மில்லியன் ரூபாய் (20 இலட்சம் ரூபாய்) நட்டஈடு வழங்குமாறும், 2 இலட்சம் ரூபாய் நீதிமன்ற அபராதம் செலுத்துமாறும் அவர் உத்தரவிட்டார்.
இவ்வழக்கினைச் சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் அரச சட்டவாதி ஸ்ரீ. சிவஸ்கந்தஸ்ரீ நெறிப்படுத்தியிருந்தார்.
வழக்கு நடவடிக்கையின் போது எதிரி தலைமறைவாகியிருந்தமை, குறித்த சம்பவத்தினால் சிறுமிக்கு ஏற்பட்ட கடுமையான உடல் மற்றும் உளவியல் பாதிப்புகள், மேலும் பெருகிவரும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் என்பனவே குறித்த எதிரிக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படக் காரணமாக அமைந்ததென வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. ஏ. ஆனந்தராஜா தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

