குரூப்-H பிரிவில் இடம்பெற்றிருந்த கேப் வெர்டே, தனது முதல் போட்டியை முன்னாள் சாம்பியனான ஸ்பெயினுடன் தொடங்கியது. தான் கோல் அடிக்க முடியவில்லை என்றாலும், ஸ்பெயினையும் கோல் அடிக்க விடாமல் தடுத்து, ஆட்டத்தை சமன் செய்தது.
இதனை தொடர்ந்து, இரண்டு முறை உலகக்கோப்பை சாம்பியனான உருகுவேவை எதிர்கொண்ட கேப் வெர்டே, 2-க்கு 2 என்ற கோல் கணக்கில் போட்டியை சமன் செய்து, கால்பந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. 3 ஆவது போட்டியில் சவுதி அரேபியாவை எதிர்கொண்ட கேப் வெர்டே, அந்த ஆட்டத்தையும் சமப்படுத்தி, நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறி அசத்தியது.
அட்டவணைப்படி, நாக் அவுட் சுற்றில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவை கேப் வெர்டே எதிர்கொள்ள இருப்பதை அறிந்து ரசிகர்கள் சற்று சுணக்கம் அடைந்தனர். அதற்கு காரணம், மெஸ்ஸி தலைமையிலான பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணி, கேப் வெர்டேவை எளிதில் வீழ்த்திவிடும் என நம்பினர்.
ஆனால், ஆடுகளம் வேறாக அமைந்து, கடைசி வரை போராடி நூலிழையில் கேப் வெர்டே தோல்வியை தழுவியது. ஆட்டம் தொடங்கிய 29 ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி முதல் கோலை அடித்து கணக்கை தொடங்கினார்.
அதன்பிறகு, முதல் பாதி நேரம் முடியும் வரை, இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை. 2 ஆவது பாதியின் 59 ஆவது நிமிடத்தில் கேப் வெர்டே அணியின் டெராய் டுவார்டே கோல் அடித்து அர்ஜென்டினாவின் வெற்றியை தடுத்து, ஆட்டத்தை சமன்படுத்தினார்.
இதனால் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில், முதல் 15 நிமிடத்திலேயே இரண்டு அணி வீரர்களும் தலா ஒரு கோல் அடித்து ரசிகர்களை மேலும் பதற்றம் அடைய செய்தனர். 111 ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் அடித்த பந்தை கேப் வெர்டே அணியின் டைனி தடுக்க முயன்ற போது, அவர் மீது பந்து பட்டு கோல் கம்பத்திற்குள் புகுந்தது.
இதனால், சேம் சைட் கோலாக மாறி, கேப் வெர்டே அணி தோல்வியை தழுவியது. யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது என்ற குறளுக்கு ஏற்ப, பலம் வாய்ந்த அர்ஜென்டினாவிடம் போராடி தோற்ற நீலச் சுறாக்களான கேப் வெர்டேவை கால்பந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

