மாட்சிமை தங்கிய மாமன்னரின் அதிகாரங்களை மதிக்கிறோம். ஆனால் அதே சமயத்தில் ஜனவரி 6 ஆம் தேதி புத்ராஜெயாவில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ஆதரவு பேரணி நடந்தே தீரும் என்று பாஸ் அறிவித்துள்ளது.
மாமன்னர் தலைமையிலான மன்னிப்பு வாரியம் நிர்வகிக்கும் நடைமுறைகளையும் பாஸ் ஆதரிக்கிறது என்று அதன் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ தக்கியுடின் ஹசான் கூறினார்.
புத்ராஜெயா பேலஸ் ஆஃப் ஜஸ்டிஸ் முன்பாக ஜனவரி 6 ஆம் தேதி திங்கட்கிழமை நஜிப் ஆதரவு பேரணி நடக்கிறது. இது ஓர் அமைதி பேரணி மட்டுமே. அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரண்படும் வகையில் இப்பேரணி நடத்தப்படவில்லை. மன்னிப்பு வாரிய நடைமுறைகளிலும் கட்சி தலையிடவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
நீதிக்காக போராடும் நஜிப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அனைத்து சமூகங்களும் ஒன்று கூடுகிறோம்.
வீட்டுக் காவலில் வைக்கப்படும் அரச மன்னிப்பு உத்தரவை நிறைவேற்றுவதில் சில குறிப்பிட்ட தரப்பினரின் மறைமுக தலையீடு இருக்கும் என்ற ஐயம் உள்ளது.
இதற்கு பதில் தேடி புதிய ஆதாரங்களுடன் நஜிப் மேல் முறையீட்டு நீதிமன்றத்தை நாடி இருக்கிறார். அந்த மனு மீதான விசாரணை ஜனவரி 6 ஆம் தேதி நடக்கிறது. அவருக்கு ஆதரவாகத்தான் நாங்கள் ஒன்று திரள்கிறோம் என்று தக்கியுடின் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.
திட்டமிட்ட படி இந்த ஆதரவு கூட்டம் நடைபெறும். கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம் என்று அவர் அழைப்பு விடுத்தார்.


