புத்ரஜெயா நீதி மன்றத்தின் முன் திட்டமிடப்பட்டிருக்கும் ஒற்றுமை பேரணியின் ஏற்பாட்டாளர்களிடம் பேரணியை நடத்த அனுமதி இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புத்ராஜெயா காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் ஐடி ஷாம் முகமதுவைத் தொடர்பு கொண்டபோது, டிசம்பர் 31 அன்று காவல்துறையினர் விண்ணப்பத்தைப் பெற்றதாகக் கூறினார்.
இருப்பினும் பேரணிக்கான விண்ணப்பம் முழுமையாக சமர்பிக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது. மேலும் ஜனவரி 3 ஆம் தேதி ஏற்பாட்டாளர்களுக்கு ஏற்கெனவே தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் கூட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளனர். பாதுகாப்புக் கட்டுப்பாட்டுக்காக 456 போலீசார் மற்றும் அதிகாரிகளை தயார்படுத்தி, காவல்துறையினர் ஆரம்ப ஏற்பாடுகளைச் செய்துள்ளனர் என்று அவர் கூறினார்.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் தனது சிறைத்தண்டனையின் மீதமுள்ள காலத்தை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதிக்கும் என்று கூறப்படும் அரச துணை உத்தரவு தொடர்பான மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் விசாரணையுடன் இணைந்து திங்கட்கிழமை ஒரு ஒற்றுமைப் பேரணி திட்டமிடப்பட்டது.


