கோலாலம்பூர்:
மலேசிய முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக், தனது சிறைத் தண்டனையின் எஞ்சிய பகுதியை வீட்டுக்காவலில் அனுபவிக்க அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோலாலம்பூரிலுள்ள அவரது ஜாலான் லங்காட் டூத்தா இல்லத்திற்குச் சிறைத்துறையின் முத்திரை பொறிக்கப்பட்ட இரு வாகனங்கள் இன்று காலை வருகை தந்தன.
இன்று (செப்டம்பர் 19, 2026) காலை மணி 9.45 அளவில் நஜிப்பின் இல்லத்திற்கு வந்த அந்த வாகனங்களிலிருந்து இறங்கிய அதிகாரிகள், நஜிப்பின் உதவியாளர் அகமட் லுத்பி அசார் என்பவருடன் கலந்துரையாடினர்.
அதனைத் தொடர்ந்து, அவர்கள் நஜிப்பின் வீட்டின் முன்பகுதி, வேலிகள் மற்றும் வெளிப்புற எல்லைப் பகுதிகளை நேரில் ஆய்வு செய்தனர். சிறைத்துறை வாகனங்கள் காலை 11.50 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றன. இந்த ஆய்வின் அதிகாரப்பூர்வ நோக்கம் குறித்து உடனடியாக எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை என்றாலும், வீட்டுக்காவல் தண்டனை தொடங்குவதற்கான முதற்கட்ட ஏற்பாடுகளே இதுவெனக் கருதப்படுகிறது.
செய்தியாளர்களைச் சந்தித்த நஜிப்பின் உதவியாளர் லுத்பி, அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த போதிலும் கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார். முன்னதாக, அங்கு நடைபெறும் நிகழ்வுகளைச் சேகரிக்கப் பல பத்திரிகையாளர்களும் புகைப்படக் கலைஞர்களும் நஜிப்பின் வீட்டின் வெளியே காத்திருந்தனர்.
மாட்சீமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்களின் ஒப்புதலுடன் நடைபெற்ற 64-வது மன்னிப்பு வாரியக் கூட்டத்தில், நஜிப் ரசாக்கிற்கு நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு வழங்கப்பட்டது. இதன் மூலம், RM50 மில்லியன் அபராதத் தொகையைச் செலுத்துவதற்கு உட்பட்டு, வரும் ஆகஸ்ட் 23, 2028 வரை அவர் தனது எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டுக்காவலில் அனுபவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



