Last Updated:
நகரின் மையப் பகுதியிலிருந்து வெறும் 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ள நைரோபி தேசியப் பூங்கா, சிங்கங்கள், சிறுத்தைகள், சிவிங்கிப் புலிகள், எருமைகள் மற்றும் ஒட்டகச்சிவிங்கிகள் உள்ளிட்ட பல்வேறு காட்டு விலங்குகளின் தாயகமாகத் திகழ்கிறது.
கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியின் புறநகரில் 14 வயது சிறுமி சிங்கத்தால் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைரோபி தேசியப் பூங்காவிலிருந்து வெளியே தப்பித்துச் சென்ற சிங்கம், அருகிலுள்ள குடியிருப்பு வளாகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
சிறுமியை சிங்கம் இழுத்துச் சென்றபோது, அவள் தன் தோழியுடன் விளையாடிக் கொண்டிருந்தாள் என கென்யா வனவிலங்கு சேவை (KWS) கூறுகிறது. சிறுமியின் தோழி எச்சரிக்கை குரல் எழுப்பியதைத் தொடர்ந்து, வனவிலங்கு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைவாக வந்துள்ளனர். பின்னர் அங்கு சாலையில் படிந்திருந்த இரத்தக் கறைகளைப் பின்தொடர்ந்து சென்று எம்பகதி நதியை அடைந்தனர். அங்கு அவர்கள் சிறுமியின் உடலை பலத்த காயங்களோடு கண்டெடுத்தனர். சிறுமியின் கீழ் முதுகுப் பகுதியில் சிங்கம் பலமாகத் தாக்கியதே அவளது இறப்பிற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
தப்பிச் சென்ற சிங்கத்தைப் பிடிக்க கென்ய வனவிலங்கு சேவை தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. ஆனால் இப்போது வரை சிங்கம் யாருடைய பார்வையிலும் சிக்காமல் தலைமறைவாகவே உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் தடுக்க கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதோடு, சிங்கத்தைப் பிடிக்க பொறிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
நகரின் மையப் பகுதியிலிருந்து வெறும் 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ள நைரோபி தேசியப் பூங்கா, சிங்கங்கள், சிறுத்தைகள், சிவிங்கிப் புலிகள், எருமைகள் மற்றும் ஒட்டகச்சிவிங்கிகள் உள்ளிட்ட பல்வேறு காட்டு விலங்குகளின் தாயகமாகத் திகழ்கிறது. பூங்காவைச் சுற்றி மூன்று பக்கங்களிலும் வேலி அமைக்கப்பட்டிருந்தாலும், அதன் தெற்கு எல்லை விலங்குகள் இடம்பெயர்வதற்கு வசதியாகத் திறந்தவெளியாக அமைந்திருக்கிறது. இது சில சமயங்களில் வனவிலங்குகள் அருகிலுள்ள மனித குடியிருப்புகளுடன் நெருங்கிய தொடர்புக்கு வழிவகுக்கிறது.
சிறுமி பலியான சம்பவம், மனிதர்கள்-வனவிலங்குகளுக்கு இடையேயான மோதல்கள் அதிகரித்து வருவது குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது. இருப்பினும் மக்களைக் கொல்லும் சிங்கங்களைச் சந்திப்பது மிகவும் அரிதே. ஒரு நாள் முன்பு தான், நைரோபியிலிருந்து வடக்கே சுமார் 130 கி.மீ தொலைவில் உள்ள நைரி கவுண்டியில் 54 வயது நபர் யானை தாக்கிக் கொல்லப்பட்டார்.
“இப்படித் தொடர்ச்சியான தாக்குதல் சம்பவங்கள் எங்கோ, எப்போதோ நடைபெறும் தனிமைப்படுத்தப்பட்டவை அல்ல” என்று வைல்ட்லைஃப் டைரக்டின் தலைமை நிர்வாக அதிகாரியும் வனவிலங்கு பாதுகாவலருமான பவுலா கஹும்பு பிபிசி செய்தியிடம் தெரிவித்தார். குறிப்பாக அதிக ஆபத்துள்ள மண்டலங்களில், வனவிலங்கு நடமாட்டம் குறித்த சிறந்த இடர் மதிப்பீடுகள் மற்றும் நிகழ்நேர தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்த அவர் அழைப்பு விடுத்தார்.
வனவிலங்கு வாழ்விடங்களுக்கு அருகிலுள்ள லாட்ஜ்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றியுள்ள பாதுகாப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் கஹும்பு வலியுறுத்தினார். “விளக்குகள், அலாரங்கள், பாதுகாப்பான வேலிகள் மற்றும் ஸ்ப்ரேக்கள் போன்ற வேட்டையாடும் எதிர்ப்புத் தடுப்புகள் தரமானதாக இருக்க வேண்டும். தடுப்பு நடவடிக்கைதான் நம்முடைய சிறந்த பாதுகாப்பு வழி” என்று அவர் கூறினார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
April 21, 2025 4:21 PM IST
தோழியுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை கடித்துக்கொன்ற சிங்கம்.. நைரோபி தேசிய பூங்காவில் அதிர்ச்சி!


