நாட்டின் தொழிலாளர்களிடையே ஆங்கில மொழிப் புலமையை வலுப்படுத்துவதற்காக, மனிதவள அமைச்சு மூன்று உத்திகளைச் செயல்படுத்தி வருகிறது. இதில் அதன் கீழ் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்களில் தொழில்நுட்பம், தொழில்முறை கல்வி பயிற்சி (TVET) பாடத்திட்டங்களை மேம்படுத்துவதும் அடங்கும்.
மலாய் மொழியின் தேசிய மொழி அந்தஸ்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப உள்ளடக்கிய, முறையான அணுகுமுறையின் மூலம், தொழிலாளர்களிடையே ஆங்கில மொழிப் புலமையை படிப்படியாக வலுப்படுத்த ‘கேசுமா’ உறுதிபூண்டுள்ளதாக அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய ரீதியிலான வேலைச் சூழல், உயர்தொழில்நுட்பம், தானியங்கி முறை, செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றால் இயக்கப்படும் இன்றைய காலகட்டத்தை எதிர்கொள்வதற்கும், குறிப்பாகப் புதிய பணியாளர்கள், ‘திவேட்’ பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிப்பதற்கும் ஆங்கில மொழிப் புலமை என்பது ஒரு முக்கியமான அடிப்படைத் தகுதியாகும் என்று அவர் கூறினார்.
‘ஜெ.பி.கே’ எனப்படும் திறன் மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் பயிற்சி நிலையங்களில், ‘திவேட்’ பாடத்திட்டங்களை மேம்படுத்தும் ஒரு முயற்சியாக, பாடப்புத்தகங்கள், குறிப்புப் பொருட்கள் ஆகியவை இரண்டு மொழிகளில் (மலாய் , ஆங்கிலம்) பயன்படுத்துவதை ஊக்குவித்து வருகிறோம். அதேபோல், வேலை செய்யும் இடத்தில் நடக்கும் நிஜமான சூழல்களை அடிப்படையாகக் கொண்ட பயிற்சி முறைகளும், மாணவர்கள் செய்யும் படைப்புகள், தேர்வுகளை ஆங்கிலத்தில் நடத்துவதும் இதில் அடங்கும்.
மனிதவளத் துறையின் கீழ் முழுநேரக் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும், தங்களது படிப்பு காலம் முழுவதும் ஆங்கிலப் பாடத்தை ஒரு கட்டாயப் பாடமாகப் பயில வேண்டும் என்ற திட்டத்தின் மூலம் ஆங்கில மொழிப் புலமைக்கு ஆதரவு வழங்கப்படுகிறது, என்று இன்று நாடாளுமன்ற மக்களவைக் கூட்டத் தொடரில் ரமணன் தெரிவித்தார்.
மலேசியாவின் அனைத்துத் துறைகளிலும் உள்ள தொழிலாளர்களின் ஆங்கில மொழிப் புலமையை வலுப்படுத்துவதற்கு, மனிதவள அமைச்சு எந்த அளவிற்குத் தயாராக உள்ளது, அதற்கான உரிய திட்டங்களை உருவாக்கியுள்ளதா?” என்று கோலாகங்சார் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ இஸ்கண்டார் சுல்கர்னைன் அப்துல் காலிட் கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
அதே வேளையில், உலகளாவிய தொழில்துறை சார்ந்த துறைகளுக்காகத் தயாரிக்கப்படும் ‘தேசிய வேலைத்திறன் தரநிலை’ (NOSS) பாடத்திட்டங்களில், ஆங்கில மொழிப் பயன்பாட்டையும் ஒரு முக்கிய அங்கமாக மனிதவள அமைச்சு இணைத்து வருகிறது என்று அவர் கூறினார்.
குறிப்பாக மேம்பட்ட உற்பத்தித் துறை (Advanced manufacturing), தகவல், தகவல் தொடர்பு தொழில்நுட்பம், ஆட்டோமோட்டிவ், விண்வெளித் துறை, தொழில்முறை சேவைகள் போன்ற துறைகளில் இந்த ஆங்கில மொழிப் பயன்பாடு இணைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். தொழில்நுட்பச் சொற்களைப் பயன்படுத்துதல், வேலை தொடர்பான ஆவணங்களைப் புரிந்துகொள்ளுதல், பணியிடத்தில் தடையின்றித் தொடர்புகொள்ளுதல் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
இதுவரை சுமார் 90 சதவீத வேலைத்திறன் தரநிலைகள் தொழில்துறை நிபுணர்களால் ஆங்கிலத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், தஹ்ஃபிஸ் கல்வி, மசூதி நிர்வாகம் போன்ற இஸ்லாம் சமயம் சார்ந்த துறைகளுக்கு மட்டும் இதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். அதுமட்டுமல்லாமல், மனிதவள மேம்பாட்டுக் கழகத்தின் (HRD Corp) கீழ் ‘e-LATiH’ எனும் இணையதளப் பயிற்சித் தளத்தை மனிதவள அமைச்சு வழங்குகிறது. இதில் 2,000-க்கும் மேற்பட்ட பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன என்று ரமணன் கூறினார்.
இந்த ‘e-LATiH’ இணையதளத்தில் ஆங்கில மொழிப் பாடங்கள், அலுவலக ரீதியிலான தகவல் பரிமாற்றம், பணியிடத் திறன்கள் தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்படுவதாக அவர் சொன்னார். இந்த ‘e-LATiH’ இணையதளம் மூலம், நகரப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மலேசியர்களும், பட்டதாரிகளும் – குறிப்பாக சபா மற்றும் சரவாக் மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், தங்களுக்கு வசதியான நேரத்தில் ஆங்கில மொழிப் புலமையை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.




