தொலைந்த கிரெடிட் கார்ட்டில் முகம் தெரியாத நபர் செலவு செய்தால்.. அந்த பணத்தை யார் செலுத்த வேண்டும்?
இன்றெல்லாம் கிரெடிட் கார்டு பெரும் நபர்களின் எண்ணிக்கை முன்பை விட அதிகமாகவே இருக்கிறது. முன்பெல்லாம் இதற்கு வசூலிக்கப்படும் வட்டியைக் கருத்தில் கொண்டு பலரும் கிரெடிட் கார்டு பெற தயங்கி வந்தனர். ஆனால் இப்போது அதை பாதுகாப்பாக பயன்படுத்த தெரிந்தவர்கள் அதிகரித்து விட்டனர். கிரெடிட் கார்டு பெற்ற ஒருவர் அதை தற்செயலாக தொலைத்து விடுகிறார். அதை வைத்து யாரோ ஒருவர் செலவு செய்கிறார் என்றால் அந்த பணத்தை யார் செலுத்த வேண்டும்? என்பதைத்தான் இந்தப் பதிவில் பார்க்கவுள்ளோம்.
உங்களுடைய கிரெடிட் கார்டு தொலைந்துபோனாலோ அல்லது திருடப்பட்டாலோ முதலில் நீங்கள் அதை பிளாக் செய்ய வேண்டும். இந்த வசதி அனைத்து கிரெடிட் கார்டு வழங்கிய வங்கியின் ஆப்களிலும் இருக்கிறது. “FREEZE” என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். அதை வைத்து நீங்கள் பிளாக் செய்யலாம்.
ஆனால் நீங்கள் பிளாக் செய்வதற்கு முன்பே பணம் திருடப்பட்டால் என்ன செய்வது? அந்த பணத்திற்கு யார் பொறுப்பு? என்பதைப் பார்ப்போம். உங்களுக்கே தெரியாமல் பரிவர்த்தனை நடந்தாலும் நீங்கள் வாங்கிய கார்டுக்கு நீங்களே பொறுப்பு. இதற்காகத்தான் கார்டு தொலைந்த அடுத்த கனமே வங்கியிடம் புகார் அளிக்க வேண்டும். ஆனால் வங்கியின் தவறாலோ அல்லது வங்கி சிஸ்டம் தவறாலோ இது போன்ற மோசடி நடந்தால் வாடிக்கையாளர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி விதிகள் கூறுகிறது.

எவ்வளவு தொகைக்கு நீங்கள் பொறுப்பு?: வங்கிக்கோ அல்லது வாடிக்கையாளருக்கோ எந்த சம்பந்தமும் இல்லாமல் யாரோ ஒருவர் கிரெடிட் கார்டு மூலம் பணத்தை செலவு செய்திருந்தால் அதற்கு சீக்கிரமாக அந்த வாடிக்கையாளர் வங்கியில் புகார் அளிக்க வேண்டும். 3 வேலை நாட்களுக்குள் புகார் அளித்து விட்டால் கிரெடிட் கார்டு பெற்ற வாடிக்கையாளர் 1 ரூபாய் கூட செலுத்தத் தேவையில்லை.
அதுவே 4 முதல் 7 வேலை நாட்களுக்குள் புகார் அளித்தால் கார்டு வரம்பைப் பொறுத்து பணம் செலுத்த வேண்டும். உதாரணமாக ரூ.5 லட்சம் வரை வரம்பு இருந்தால் அதிகபட்சம் ரூ.10,000 செலுத்த வேண்டும். ரூ.5 லட்சத்திற்கு மேல் இருந்தால் அதிகபட்சமாக ரூ.25,000 வரை செலுத்த வேண்டும். 7 வேலை நாட்களுக்கு பிறகு வாடிக்கையாளர் புகார் அளித்தால் வங்கியின் பாலிசிக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
முக்கியமாக கார்டை வைத்து ட்ரான்ஸ்ஷாக்ஷன் நடந்த தேதியில் உங்களுக்கு ஒரு மெசேஜ் வரும். அது யாரோ ஒருவர் செய்திருந்தாலும் இந்த மெசேஜை நீங்கள் உங்கள் மொபைலில் பார்க்கலாம். மெசேஜ் வந்த நாளிலிருந்து நீங்கள் எத்தனை நாட்களில் புகார் அளிக்கிறீர்கள் என்பதை பொறுத்து பணம் செலுத்த வேண்டும்.
வங்கியின் அலட்சியத்தால் தவறு நடந்தால் வாடிக்கையாளர்கள் எவ்வளவு செலுத்த வேண்டும்?: நீங்கள் கார்டை பிளாக் செய்து விட்டீர்கள்.. அதன் பிறகும் வங்கியின் கவனக்குறைவால் அல்லது வங்கி சாப்ட்வேரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் பணம் திருடப்பட்டால் வாடிக்கையாளர்கள் எந்தவித தொகையையும் செலுத்தத் தேவையில்லை.
இதற்கு மேலே கூறப்பட்டுள்ள மூன்று நாட்கள் கால வரம்பும் கிடையாது. முழுப் பொறுப்பையும் வங்கியே ஏற்க வேண்டும். ஆனால் நீங்களே உங்கள் OTP, பின் நம்பர், பாஸ்வேர்ட் போன்றவற்றை யாரோ ஒருவரிடம் வழங்கி உங்களுடைய தவறால் இது போன்ற மோசடி நடந்திருந்தால் அதற்கு வங்கியை குறை கூற முடியாது. உங்களுக்கு ஏற்படும் இழப்பிற்கு நீங்களே பொறுப்பேற்க வேண்டும்.
கார்டு தொலைந்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?: உங்களுடைய கிரெடிட் கார்டு தொலைந்து விட்டால் அதை பிளாக் செய்வதுதான் முதல் படி. அடுத்ததாக கிரெடிட் கார்ட் பெற்றவுடனேயே புகார் அளிக்கும் நம்பர் மற்றும் பிற விவரங்களை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இது எதிர்பாராத நேரங்களில் உங்களுக்கு உதவியாக இருக்கும். 1930 என்ற சைபர் கிரைம் நம்பருக்கு அழைப்பு விடுத்து உங்கள் புகாரை பதிவு செய்யலாம் அல்லது “https://www.cybercrime.gov.in/” என்ற இணையதளம் வாயிலாகவும் உங்களுடைய புகாரை பதிவு செய்யலாம்.
