கோலா லிப்பிஸ், சிறு வயது முதலே தந்தையை இழந்து வாடிய வறுமை மற்றும் சோகத்தை தனது முன்னேற்றத்திற்கான உந்துசக்தியாக மாற்றிய மாஸ்டர் உடற்பயிற்சி நிபுணர் கே. ஜெய் பிரபாகரன் தேவர் (29), ‘டாக்டர் கேஜே’ என்று பரவலாக அறியப்படுபவர், தற்போது தனது மூன்றாவது உலக சாதனையை வெற்றிகரமாகப் படைத்து புதிய வரலாறு படைத்துள்ளார். ஜூன் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்த கடினமான சவாலில், எவ்வித இடைவெளியுமின்றி தொடர்ந்து 18 மணி நேரம் கார்டியோ (Cardio) மற்றும் பளுதூக்கல் (Weightlifting) பயிற்சிகளை மேற்கொண்டு அவர் இந்த இமாலய சாதனையை எட்டியுள்ளார். ஒவ்வொரு நாளும் அதிகாலை 4:00 மணிக்குத் தொடங்கிய இந்த கடுமையான சவாலானது, இரவு 11:00 மணியளவில் நிறைவடைந்தது. இடைவிடாத 18 மணி நேர தீவிர உடல் உழைப்பைக் கோரும் இச்சாதனை, ‘மலேசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ (Malaysia Book of Records – MBOR) மற்றும் உலக அளவிலான ‘இன்ஃபுளூயன்சர் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்’ (Influencer Book of World Records) ஆகியவற்றில் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மகத்தான வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கேஜே உணர்ச்சிவசப்பட்ட நிலையில், “எனக்கு மூன்று வயதாக இருந்தபோது, எனது தந்தை தனது 42-வது வயதில் காலமானார். சிறு வயது முதலே அவரது இழப்பு என்னை ஆழமாக பாதித்தது. இந்த மூன்றாவது உலக சாதனையை எனது மறைந்த தந்தைக்கு நான் முழுமையாக சமர்ப்பிக்கிறேன். மலேசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்துள்ள இச்சாதனை, எனது வாழ்க்கையின் உந்துசக்தியாக விளங்கும் எனது தந்தைக்கு நான் செலுத்தும் மிக அர்த்தமுள்ள நன்றிக்கடனாகும்,” என்று உருக்கத்துடன் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, எனது தேசிய அளவிலான சாதனையைத் தொடர்ந்து இதற்கான தயாரிப்புகளைத் தொடங்கினேன். என்னை முழுமையான தகுதி நிலைக்குக் கொண்டுவர தீவிர உடற்பயிற்சிகளுடன், சைவ உணவு முறைக்கு (Vegetarian Diet) முற்றிலுமாக மாறினேன். இதன் மூலம் எனது உடல் எடையில் 32 கிலோவைக் குறைக்க முடிந்தது” என்று தனது கடின உழைப்பை விவரித்தார்.
இதற்கு முன்னதாக, 2023 ஆம் ஆண்டில் 12 மணி நேர தொடர் கார்டியோ உடற்பயிற்சி மூலம் சாதனைப் புத்தகத்தில் நுழைந்த இவர், பின்னர் அதனை 15 மணி நேரமாக நீட்டித்து கின்னஸ் உலக சாதனை அங்கீகாரத்தைப் பெற்றார். தற்போது கூடுதலாக 3 மணி நேரத்தை அதிகரித்து, 18 மணி நேரமாக மாற்றித் தனது சொந்த சாதனையைத் தானே முறியடித்துள்ளார். இந்த சவாலின் போது கடுமையான வெப்பம் மற்றும் அதீத உடல் சோர்வு ஏற்பட்ட போதிலும், மன வலிமையுடன் போராடி வெற்றிக்கொடி நாட்டியதாக அவர் குறிப்பிட்டார்.
தனது இந்த சாதனைப் பயணத்திற்கு முழு ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கிய பகாங் மாநில இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை (Jabatan Belia dan Sukan Negeri Pahang) மற்றும் பகாங் அரசு சாரா அமைப்புகளுக்கு (NGO) ஜெய் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். பகாங் மலேசிய இந்திய உடற்பயிற்சி சங்கத்தின் தலைவரான இவர், இளைஞர்கள் ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க இந்த வெற்றி ஒரு சிறந்த தூண்டுகோலாக அமையும் என நம்புகிறார். மேலும், தனது அடுத்த இலக்கு குறித்துப் பேசிய அவர், வரும் அக்டோபர் மாதம் குவாந்தானில் நடைபெறவுள்ள தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, 5 மணி நேரத்தில் 5,000 முறை ‘ஜம்பிங் ஜாக்ஸ்’ (Jumping Jacks) பயிற்சிகளைச் செய்து மேலும் இரண்டு புதிய மலேசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனைகளைப் படைப்பதே தனது அடுத்த நோக்கம் என்று உத்வேகத்துடன் கூறி தனது பேட்டியை நிறைவு செய்தார்.



