கோலாலம்பூர்:
கோலாலம்பூரில் உள்ள ஒரு முன்னணி ஹோட்டலில் மரணமடைந்த தைவானைச் சேர்ந்த பிரபல பெண் ஊடகவியலாளர் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மலேசிய ராப் பாடகர் Namewee இன்று போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ராப் பாடகர் இன்று (நவம்பர் 13) தொடங்கி நவம்பர் 26 வரை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று, கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், “31 வயதுடைய தைவான் பெண்ணின் சவப் பரிசோதனை அறிக்கை கிடைத்ததும், முழு விசாரணை அறிக்கை துணை பொது வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும்,” என்றார்.
குறித்த தைவான் பெண் கோலாலம்பூரிலுள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறையில் இறந்த நிலையில் கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டார். விசாரணையில், அவர் இறப்பதற்கு முன்பு கடைசியாக சந்தித்த நபர் Namewee என்பதும், இருவருக்கும் தனிப்பட்ட தொடர்பு இருந்ததையும் போலீஸ் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
மரணத்துக்கான காரணம் இன்னும் வெளிவராத நிலையில், போலீஸ் விசாரணை தொடர்கிறது.



