கோலாலம்பூர்:
மலேசியாவின் தனித்துவமான கலாச்சார ஒருமைப்பாட்டை தைப்பூசத் திருவிழா உலகிற்கு எடுத்துக் காட்டுகிறது என்று அமைச்சர் ரமணன் புகழாரம் சூட்டியுள்ளார்.
மலேசியா மடானி (Malaysia Madani)அரசாங்கத்தின் நோக்கம், “மனிதாபிமானம், நல்லிணக்கம், நல்வாழ்வு மற்றும் ஒற்றுமை ஆகியவற்றை நிலைநிறுத்தி, அனைவருக்கும் ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதே ஆகும். இதுவே எனது நாட்டின் பெருமை,” என அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தைப்பூசத்தை வெறும் கொண்டாட்டமாக மட்டும் பார்க்காமல், வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளத் தேவையான நம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் தியாகம் நிறைந்த ஒரு ஆன்மீகப் பயணமாக இந்து சமூகம் இதனைக் கருத வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
பத்துமலை மற்றும் இதர ஆலயங்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்தச் செல்லும் பக்தர்கள் பாதுகாப்பாகவும், இறை அருளோடும் தங்களது பயணத்தை மேற்கொள்ள அவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
திருவிழா காலங்களில் மக்கள் பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்ய இரவு பகலாக உழைக்கும் போலீசார், தன்னார்வலர்கள் மற்றும் மனிதவள அமைச்சின் பணியாளர்களுக்கு அமைச்சர் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
“தைப்பூசத் திருவிழாவை நமது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் இந்து சகோதரர்களுடன் இணைந்து நல்லிணக்கத்தோடு கொண்டாடுவோம். பாதுகாப்பிற்கு எப்போதும் முன்னுரிமை கொடுங்கள்,” என்று அவர் வலியுறுத்தினார்.




