இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதல் தவறில்லை என்று கூறிய ஈரான் தலைவர், தேவைப்பட்டால், மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என எச்சரித்துள்ளார்.
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை அடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் மீது 200 ஏவுகணைகளை ஈரான் வீசியது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்த இஸ்ரேல், அதற்கான வியூகம் வகுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதனால், இஸ்ரேலின் தாக்குதலுக்கு அஞ்சி ஈரான் தலைவர் அயதுல்லா கமேனி பதுங்கி விட்டதாக மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
ஆனால், அதனை பொய்யாக்கும் வகையில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள மோசல்லா மசூதியில் வெள்ளிக்கிழமையான நேற்று, கூட்டுத் தொழுகையில் பங்கேற்ற அயதுல்லா கமேனி, சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு நாட்டு மக்கள் இடையே உரையாற்றினார். அப்போது இஸ்ரேல் மீது ஈரான் தொடுத்த ஏவுகணைத் தாக்குதல், சிறிய தண்டனை தான் என்று குறிப்பிட்ட கமேனி, தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என எச்சரித்தார்.
இதையும் படிக்க:
இஸ்ரேலை எதிர்க்க அழைப்பு விடுத்த அலி கமேனி.. அதிகரிக்கும் போர் பதற்றம்!
ஈரான் பக்கம் தொடர்ந்து அமைதி காத்து வரும் இஸ்ரேல், லெபனானில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பினர் பதுங்கி இருப்பதாக சந்தேகிக்கும் அனைத்து கட்டடங்களையும் இஸ்ரேல் தரைமட்டமாக்குகிறது. இதனால், கடந்த 3 வாரங்களில் 1400 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதே சமயம், கடந்த 4 நாட்களில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த 250 பேரை கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. லெபனானின் தெற்கு பகுதியில் தாக்குதல் உக்கிரமாக உள்ள நிலையில், 30 கிராம மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரித்துள்ளது. மேலும் லெபனானில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சிரியாவிற்கு செல்லும் பாதையை சேதப்படுத்திய இஸ்ரேல், அவ்வழியாக ஆயுத விநியோகம் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில், ஈரானில் உள்ள ஆயுதப் படைக்கு வெடிகுண்டு விநியோகம் செய்வதாகக் கூறி, ஏமன் தலைநகர் சனாவில் ஹவுதி அமைப்பினரை குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த ஹமாஸ் தலைவர்களின் இறுதி ஊர்வலம் மேற்குக் கரையில் நடைபெற்றது. அப்போது, துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
இதையும் படிக்க:
தொடங்குகிறதா மூன்றாம் உலகப்போர்? ஈரான் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா
இதேபோன்று ஈராக்கில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லாவிற்கு அடையாள இறுதி ஊர்வலம் நடைபெற்றது. அதில், நஸ்ரல்லாவின் புகைப்படத்துடன் ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவின் கொலை மற்றும் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து காஷ்மீரிலும் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று ஈரான் தலைவர் முன்மொழிந்துள்ளார். அதே சமயம், ஈரானுக்கு பதிலடி கொடுக்க அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் வியூகம் வகுத்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல்-ஈரான் இடையிலான போர் மேலும் தீவிரம் அடைந்து, அண்டை நாடுகளுக்கு பரவாமல், அமைதி திரும்ப வேண்டும் என்பதே உலக நாடுகளின் எதிர்பார்ப்பாகும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
