தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் திட்டங்களைப் போன்று, பல்வேறு இலவச வாக்குறுதிகளை மகாராஷ்டிர தேர்தல் களத்தில் ஆளும் பாஜக கூட்டணியும், மகா விகாஸ் அகாடியும் வெளியிட்டுள்ளன. அவை என்னென்ன என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு வரும் 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், ஆளும் மகாயுதி கூட்டணி மற்றும் மகா விகாஸ் அகாடி கூட்டணி இடையே போட்டி நிலவுகிறது.
மகாயுதி கூட்டணியில் பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மகா விகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்தத் தேர்தலையொட்டி, மகா விகாஸ் அகாடியும், பாஜக-வும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன.
தமிழ்நாட்டில் மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் விடியல் பயணம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், மகாலட்சுமி திட்டத்தின்கீழ், மகளிருக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், மகளிருக்கு பேருந்துகளில் இலவசப் பயணம் திட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
பாஜக வெளியிட்டுள்ள வாக்குறுதியில் பெண் சகோதரி திட்டத்தின்கீழ், பெண்களுக்கு தற்போது வழங்கப்படும் ஆயிரத்து 500 ரூபாய், 2 ஆயிரத்து 100 ரூபாயாக அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காவல் துறையில் 25 ஆயிரம் பெண்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2021-ஆம் ஆண்டில் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகளின் 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடியின் தேர்தல் அறிக்கையில், 3 லட்சம் ரூபாய் வரையிலான வேளாண் கடன்கள் ரத்துசெய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் 12 ஆயிரம் ரூபாய் நலநிதி, 15 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படும் என்று பாஜக உறுதியளித்துள்ளது.
Also Read | “சக்கரம் இல்லாத வாகனம் மகாவிகாஸ் கூட்டணி” – பிரதமர் மோடி விமர்சனம்!
தமிழ்நாட்டில் 100 யூனிட் வரை மின்சாரத்தை பயன்படுத்தும் நுகர்வோருக்கு கட்டணம் வசூலிக்கப்படாத நிலையில், மாதம் தோறும் 300 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு, 100 யூனிட் வரையான மின்சாரத்துக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று காங்கிரஸ் கூட்டணி தெரிவித்துள்ளது. அதேநேரம், 30 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் குறைக்கப்படும் என்று பாஜக கூறியுள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மகா விகாஸ் அகாடி உறுதியளித்துள்ளது.
மகாராஷ்டிராவில் வேலைவாய்ப்பு இல்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதந்தோறும் 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், அடுத்த 5 ஆண்டுகளில் புதிதாக 12 லட்சத்து 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என மகா விகாஸ் அகாடி தெரிவித்துள்ள நிலையில், 10 லட்சம் மாணவர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், 25 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் பாஜக உறுதியளித்துள்ளது.
ஆண்டுக்கு 6 எரிவாயு சிலிண்டர்கள் தலா 500 ரூபாய் விலையில் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கூட்டணி தெரிவித்துள்ளது.
அதேநேரம், வயது முதிர்ந்தோருக்கான ஓய்வூதியம் ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து 2 ஆயிரத்து 100ஆக அதிகரிக்கப்படும், அங்கன்வாடி பணியாளர்களுக்கு காப்பீடு, மாதாந்திர கவுரவத் தொகையாக 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என பாஜக உறுதியளித்துள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)