Last Updated:
தெலங்கானாவில் உள்ள ஓட்டல் ஒன்றில் சிறு வாக்குவாதம் கைகலப்பாகி அடிதடியில் முடிந்ததால், கடையே சின்னாபின்னமானது.
தெலங்கானாவில் ஓட்டலுக்குள் புகுந்த அடாவடி கும்பல், பொருட்களை அடித்து உடைத்து சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வியாபாரிகளை அச்சுறுத்தும் கும்பலுக்கு கடிவாளம் போடப்படுமா?
சிறு வாக்குவாதம் கைகலப்பாகி அடிதடியில் முடிந்ததால், கடையே சின்னாபின்னமானது. வாடிக்கையாளர்கள் போன்று வந்தவர்கள் வீண் வம்பு இழுத்து, ஊழியர்களை அடித்து உதைத்து ரத்தக் காயம் ஏற்படுத்தியுள்ளனர்… நடந்தது என்ன…?
தெலங்கானா மாநிலம் மேட்சல் நகரில் சாலையோர ஓட்டல் ஒன்று உள்ளது. 24 மணி நேரம் பரபரப்பாக காணப்படும் பகுதியில் ஓட்டல் அமைந்துள்ளதால் வாடிக்கையாளர்களின் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் உள்ளூர் இளைஞர்கள் கும்பலாக அந்த ஓட்டலுக்கு வந்துள்ளனர். அங்கு, சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது டீ மாஸ்டரை சீண்டும் வகையில் அந்த கும்பல் வம்பிழுத்துள்ளது. அதை டீ மாஸ்டர் கண்டித்ததால் சிறு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருதரப்பினரும் மாறி மாறி வார்த்தைகளை உதிர்த்ததால் வாக்குவாதம் கைகலப்பாகியுள்ளது.
உடனே, கடையில் இருந்த ஊழியர்கள் அந்த இளைஞர்களை தட்டிக் கேட்டுள்ளனர். அதற்கு, தங்களையே கேள்வி கேட்பீர்களா என்ற தெனாவட்டில் கடை ஊழியர்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து உணவகத்திற்குள் நுழைந்தவர்கள், அங்கிருந்த உடைமைகள் மற்றும் பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர்.
அதைக் கண்டு வாடிக்கையாளர்கள் அச்சத்தில் தலைதெறிக்க ஓடியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்ததும், அடாவடி கும்பல் அங்கிருந்து தப்பியோடி உள்ளது. இதையடுத்து ஓட்டல் உரிமையாளர் சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
இதுபோன்று அட்டூழியம் செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தெலங்கானா: ஓட்டலுக்குள் புகுந்து பொருட்களை அடித்து சூறையாடிய அடாவடி கும்பல் – கடிவாளம் போடப்படுமா…?


