Last Updated:
அனைவரையும் நாய் கடிப்பதில்லை என விலங்கின ஆர்வலர்கள் முன்வைத்த வாதத்தை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், நாய்களால் கடிபடாதவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.
தெருநாய் விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 20 நாட்களில் ராஜஸ்தானில் இரண்டு நீதிபதிகள் தெருநாய்களால் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து இருப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இந்நிலையில், பல இடங்களில் நாய்களை அப்புறப்படுத்த குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதிட்டார்.
இன்று பூங்காக்களில் நாய்கள் சுற்றித் திரிவதை ஆதரிப்பவர்கள், நாளை எருமை மாட்டை பூங்காவிற்கு அழைத்து வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று குறிப்பிட்டார். எனவே, தெருவில் சுற்றித் திரியும் விலங்குகளை முறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.
அப்போது அனைவரையும் நாய் கடிப்பதில்லை என்று விலங்கின ஆர்வலர்கள் முன்வைத்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், நாய்க்கடி படாதவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று குறிப்பிட்டனர்.
மேலும், தொழில்நுட்ப வசதி மூலம் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து விபத்துகளை தமிழ்நாடு அரசு வெற்றிகரமாக தடுத்து இருப்பதாக நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.
நாய்கள் கடிப்பது மட்டுமின்றி, அதனால் சாலை விபத்துகளும் ஏற்படுவதாக நீதிபதிகள் கூறியதற்கு, நாய்களால் விபத்து ஏற்படுவதில்லை என்று விலங்கின ஆர்வலர்கள் வாதிட்டனர்.
அதற்கு பதிலளித்த நீதிபதிகள், எப்போதாவது சாலைகளில் இருசக்கர வாகனங்களில் சென்றுள்ளீர்களா என்று வினவினர். இது தொடர்பான வாதம் வியாழக்கிழமை தொடரும் எனக் கூறி விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
January 07, 2026 10:01 PM IST


