புதுடெல்லி: தெரு நாய்கள் விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யாத தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் நவம்பர் 3-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெரு நாய்கள் தொல்லை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த வழக்கு கடந்த 27-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, பதில் மனு தாக்கல் செய்யாத தமிழ்நாடு உள்ளிட்ட மாநில தலைமைச் செயலாளர்கள் நவம்பர் 3-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு முன், மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நேற்று ஆஜராகி, “பதில் மனு தாக்கல் செய்யாத மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் நேரில் வருவதற்கு பதிலாக காணொலியில் ஆஜராக அனுமதிக்க வேண்டும்” என முறையிட்டார்.
முறையீட்டை நிராகரித்த நீதிபதிகள், “விலங்கு கருத்தடை விதிகளை நாடாளுமன்றம் ஏற்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டோம். அதற்கும் நடவடிக்கை இல்லாமல் தூங்கிக் கொண்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பு இல்லை. நேரில் வந்து விளக்கம் அளிக்கட்டும்” என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.

