தூத்துக்குடி-யில் சைலெண்டாக நடக்கும் மாற்றம்.. இதென்னப்பா பயங்கரமா இருக்கே.. மாஸ்டர் பிளான் தான்!
தமிழகத்தின் தொழில் வரைபடத்தில் தூத்துக்குடி புதிய அத்தியாயத்தை எழுதத் தயாராகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். இதுவரை ஏற்றுமதி மற்றும் துறைமுக நகரமாக அறியப்பட்ட தூத்துக்குடி, இனி கப்பல் கட்டுமானம், கப்பல் பழுதுபார்ப்பு மற்றும் கடல்சார் தொழில்துறையின் முக்கிய மையமாக உருவாகும் திட்டம் வேகமெடுத்துள்ளது.
தென் கொரியாவின் முன்னணி கப்பல் கட்டுமான நிறுவனமான HD Korea Shipbuilding & Offshore Engineering (HD KSOE) அறிவித்துள்ள 4 பில்லியன் டாலர் மதிப்பிலான பிரம்மாண்ட திட்டத்தை மையமாகக் கொண்டு, முழுமையான கடல்சார் தொழில்துறை எகோசிஸ்டத்தை உருவாக்க தமிழக அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த தூத்துக்குடி MSME துறை இனி கப்பல் கட்டுமானம் மற்றும் அதை சார்ந்த துறைக்கான பகுதியாக மாற உள்ளது.

பெரிய இலக்கு
தமிழ்நாட்டின் அரசின் நோக்கம் வெறும் ஒரு கப்பல் கட்டுமான ஆலை அமைப்பது மட்டுமல்ல. அதனை மையமாகக் கொண்டு கப்பல் பழுதுபார்ப்பு, கடல்சார் பொறியியல், உலோக உற்பத்தி, கட்டமைப்பு தயாரிப்பு, தளவாட சேவைகள் மற்றும் துறைமுக சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்த தொழில்துறை வளாகத்தை உருவாக்குவதே முக்கிய இலக்காக கொண்டு உள்ளது.
இதன் மூலம் தூத்துக்குடி, இந்தியாவின் முக்கிய கடல்சார் உற்பத்தி மையங்களில் ஒன்றாக மாறும் வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கருதுகின்றனர். இந்த திட்டம் வெற்றிபெறுமானால், தூத்துக்குடி மட்டுமல்ல, அதன் சுற்றுப்பகுதிகளும் பெரிய அளவில் பயனடையும்.
MSME நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு
இந்த மெகா திட்டத்தின் முக்கிய அம்சமாக, கப்பல் கட்டுமான துறையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (MSME) கிடைக்கவிருக்கும் வாய்ப்புகள் தான். கப்பல் கட்டுமானத் துறைக்கு ஆயிரக்கணக்கான உதிரிபாகங்கள், ஸ்டீல் கட்டமைப்புகள், மின்சார அமைப்புகள், இயந்திர உபகரணங்கள் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப சேவைகள் தேவைப்படும்.
இதனால் தூத்துக்குடி மட்டுமின்றி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும் நூற்றுக்கணக்கான MSME நிறுவனங்கள் இந்த தொழில்துறை வளர்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு உருவாகும். இதன் மூலம் ஒரு தொழிற்சாலை மட்டுமல்ல, முழுமையான தொழில்துறை சப்ளை செயின் உருவாகும் என தமிழக அரசு எதிர்பார்க்கிறது.
4 பில்லியன் டாலர் முதலீடு
தென் கொரியாவின் HD KSOE நிறுவனம் முன்மொழிந்துள்ள இந்த புதிய கப்பல் கட்டுமானத் திட்டம், ஆண்டுக்கு 3.5 முதல் 4 மில்லியன் கிராஸ் டன் திறன் கொண்ட வர்த்தக கப்பல்களை உருவாக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இது ஒரு பசுமை நில (Greenfield) திட்டமாகும்.
இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், ஆசியாவின் மிகப்பெரிய கப்பல் கட்டுமான மையங்களில் ஒன்றாக இது உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முதலீடு தூத்துக்குடியின் தொழில் வளர்ச்சியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
ஒரு வேலை… ஆறு வேலைகளை உருவாக்கும் துறை
கப்பல் கட்டுமானத் துறையின் மிகப்பெரிய சிறப்பு அதன் வேலைவாய்ப்பு உருவாக்கும் திறன் தான். தமிழக அரசு மேற்கோள் காட்டியுள்ள மதிப்பீட்டின்படி, இந்தத் துறையின் வேலைவாய்ப்பு பெருக்கல் விகிதம் 6.4 ஆகும். அதாவது, கப்பல் கட்டுமான ஆலையில் உருவாகும் ஒவ்வொரு நேரடி வேலைக்கும், அதனுடன் தொடர்புடைய துணைத் தொழில்கள் மற்றும் சேவைத் துறைகளில் குறைந்தபட்சம் ஆறு மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்.
இந்த பெருக்கல் விளைவு தான் தூத்துக்குடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் புதிய தொழில்கள் உருவாக முக்கிய காரணமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதன் மூலம் தொழில்நுட்ப வல்லுநர்கள், பொறியாளர்கள், வெல்டிங் நிபுணர்கள், இயந்திர உற்பத்தியாளர்கள், லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு சேவைத் துறைகளுக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகும்.
தூத்துக்குடியின் முகம் மாறுமா?
இதுவரை துறைமுக செயல்பாடுகளுக்காக அறியப்பட்ட தூத்துக்குடி, இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டால் இந்தியாவின் முக்கிய கப்பல் கட்டுமான மற்றும் கடல்சார் உற்பத்தி மையமாக உருவெடுக்கும் வாய்ப்பு உள்ளது.

