மத்திய கிழக்கு மோதலைத் தணிக்கவும், பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாக்கவும், அமைதியான மற்றும் நிரந்தரத் தீர்வை நோக்கிய பேச்சுவார்த்தைகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கவும் தூதரக முயற்சிகளை தீவிரப்படுத்த மலேசியாவும் இந்தோனேசியாவும் ஒப்புக்கொண்டுள்ளதாக பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவின் அழைப்பின் பேரில் இன்று ஜகார்த்தாவிற்கு மேற்கொண்ட பயணத்தின் போது, அவருடனான சந்திப்பில் இது குறித்து விவாதிக்கப்பட்டதாக பிரதமர் கூறினார்.
“தற்போது உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அழுத்தத்தை கொடுத்து வரும் இந்த மோதலுக்கு தீர்வு காண்பதற்கான பொதுவான இணக்கப்பாட்டை எட்டுவதற்கு இந்த சந்திப்பு ஆக்கபூர்வமான சூழலை உருவாக்கியுள்ளது,” என்று அவர் இன்று தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பின் போது, ஹார்முஸ் நீரிணை உள்ளிட்ட உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் மற்றும் மூலோபாய வர்த்தகப் பாதைகள் பாதிக்கப்படாமல் உறுதி செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தியதாக அன்வர் கூறினார்.
“சர்வதேச தலைவர்களுடனான சந்திப்புகள் குறித்த விவரங்களையும் நான் பகிர்ந்து கொண்டேன். இது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தவும், கருத்துக்களை ஒருங்கிணைக்கவும் மற்றும் குறிப்பாக எரிசக்தி மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான உலகளாவிய பாதிப்புகளை மதிப்பீடு செய்யவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகும்,” என்று அவர் கூறினார்.
வன்முறையை நிராகரிப்பதிலும், சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்துவதிலும், அனைத்து தரப்பினரும் அமைதிப் பாதைக்குத் திரும்புமாறு வலியுறுத்துவதிலும் மலேசியா உறுதியாக இருப்பதாக அன்வர் தெரிவித்தார்.
இந்த மாத தொடக்கத்தில் ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, உலக எண்ணெய் விநியோகத்தில் 20% கடந்து செல்லும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் படைகள் மூடின. இந்த மூடல் காரணமாக கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 அமெரிக்க டாலருக்கும் (RM401) அதிகமாக உயர்ந்தது.
-fmt
